

கார்பன் உமிழ்வைக் (Carbon Emissions) குறைக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காகச் செய்யப்படும் பிரம்மாண்டச் செலவைக் கட்டுப்படுத்தவும், மத்திய அரசு தேசிய உயிரி எரிபொருள் (Bio-fuels) கொள்கையைத் தீவிரமாகச் செயல்படுத்திவருகிறது. தற்போது நாடு முழுவதும் ‘இ20’ பெட்ரோல் (20% எத்தனால் கலந்த பெட்ரோல்) நடைமுறை யதார்த்தமாகவே மாறியுள்ளது. இத்திட்டத்தின் நேரடிப் பொருளாதாரப் பலன்கள் மிகப் பெரிதாக இருந்தாலும், இதனால் சுற்றுச்சூழல் சிக்கல் உருவாகலாம் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எத்தனால் கலப்பின் பலன்கள்: இத்திட்டத்தின் மிகப்பெரிய நன்மை கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பது. இந்தியா தனது மொத்தக் கச்சா எண்ணெய்த் தேவையில் 85%க்கும் அதிகமாக இறக்குமதி செய்கிறது. இதனால் ஒவ்வோர் ஆண்டும் பெருமளவிலான அந்நியச் செலாவணி வெளியே செல்கிறது. பயிர்களைப் பயன்படுத்தி உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் எத்தனாலை பெட்ரோலுடன் கலப்பதன் மூலம், பெருமளவிலான அந்நியச் செலாவணியைச் சேமிப்பதோடு, வாகனங்களால் ஏற்படும் உமிழ்வையும் குறைக்க முடியும்.
மேலும், இது சர்க்கரை ஆலைகளுக்கும் உணவுத் தானியம் பதப்படுத்துவோருக்கும் ஓர் உத்தரவாதமான சந்தையை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த எரிபொருளை உற்பத்தி செய்வதால் விவசாய நிலங்களில் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது முக்கியமான கேள்வி.