

பறவைகளை வேடந்தாங்கலுக்கு வரவழைக்க யாரும் அழைப்பிதழ் அனுப்புவதில்லை. அவற்றுக்குத் தேவையான இயற்கைச் சூழல் அங்கு இருந்தாலே போதும். பாதுகாப்பு, நீர், உணவு, ஏற்ற காலநிலை ஆகிய அனைத்தும் ஒன்றிணையும்போது, ஆயிரக்கணக்கான கி.மீ. தாண்டிப் பறவைகள் தாமாகவே வந்து தங்குகின்றன. வளர்ச்சியின் இந்த இயற்கை விதி, விமானப் போக்குவரத்துக்கும் பொருந்தும்.
உலகின் முன்னணி விமான நிறுவனங்களை ஈர்ப்பது பிரம்மாண்டமான முனையக் கட்டிடங்களோ நீண்ட ஓடுபாதைகளோ மட்டும் அல்ல; தொலைநோக்குப் பார்வையுடன் வடிவமைக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளும்தான்.
பொருத்தமான தருணம்
தொழில் துறை, தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், வாகன உற்பத்தி, மின்னணு உற்பத்தி / ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகத் திகழும் தமிழகம், சென்னை விமான நிலையத்தைத் தென்னிந்தியாவின் மிக முக்கிய வான்வழிப் போக்குவரத்து - சரக்கு மையமாக மாற்றும் அனைத்து வாய்ப்புகளையும் பெற்றுள்ளது. ஆனால், அந்தப் பயணத்தின் வேகத்தைக் குறைக்கும் மறைமுகத் தடையாக விமான எரிபொருள் மீதான 29 சதவீத மதிப்புக் கூட்டு வரி இருந்துவருகிறது.
சென்னை விமான நிலையத்தை உலக விமானங்கள் தாமாகவே வந்து தரையிறங்க விரும்பும், ‘விமானங்களின் வேடந்தாங்க’லாக மாற்ற வேண்டும் எனில், விமான விசையாழி எரிபொருள் (aviation turbine fuel) மீது தமிழக அரசு விதித்துவரும் 29 சதவீத மதிப்புக் கூட்டு வரியை மறுபரிசீலனை செய்வது அவசியம். அதற்குப் பொருத்தமான தருணம் இது.
வரியும் செலவும்
தமிழகம் இன்று தொழில், கல்வி, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், வாகன உற்பத்தி, மின்னணு உற்பத்தி, ஏற்றுமதி ஆகிய அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.
இந்தப் பொருளாதார வலிமைக்கேற்ற வகையில் சென்னை விமான நிலையமும் தென்னிந்தியாவின் மிகப் பெரிய விமானப் போக்குவரத்து - வான்வழிச் சரக்குப் போக்குவரத்து மையமாக உருவாக வேண்டிய அனைத்துத் தகுதிகளையும் பெற்றுள்ளது. ஆனால், அந்தப் பயணத்தில் தடையாக நிற்பது உயர்ந்த விமான எரிபொருள் வரியாகும்.