

ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு (நவம்பர் 2022க்குப் பிறகு), தமிழக அரசு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு முதலில் ரூ.3 வரை உயர்த்தியும், பிறகு பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து மேலும் ரூ. 3 வரை உயர்த்தி, மொத்தமாக ரூ.44 என சமீபத்தில் நிர்ணயித்துள்ளது.
ஆனால், கால்நடை பராமரிப்பு, தீவன விலை உயர்வு போன்ற காரணங்களால், இந்த உயர்வு பாலின் தற்போதைய உற்பத்திச் செலவுக்கு போதாது என்றும், தனியார் நிறுவனங்கள் போல, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.45ஆக உயர்த்த வேண்டும் என்றும், கொழுப்பு சதவீதத்தை (4.2%) கணக்கில் கொள்ளாமல் அனைத்து பாலுக்கும் ஒரே அளவில் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தி வருகிறது. உண்மையில், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் நியாயமானவையா என்பதைப் பற்றி ஆழமாக விவாதிக்க வேண்டியுள்ளது.
விலை உயர்வு புதிதல்ல
பால் கொள்முதல் விலை உயர்வை எதிர்ப்பவர்கள், இந்தியாவில் பால் விலையை உயர்த்துவது ஒன்றும் புதிதல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் முன்னணி பால் கூட்டுறவு அமைப்புகளான ‘அமுல்’, ‘மதர் டெய்ரி’, பல மாநிலக் கூட்டுறவு நிறுவனங்கள், தீவன விலை உயர்வு, பராமரிப்புச் செலவுகளைக் கணக்கில்கொண்டு தொடர்ந்து கொள்முதல் விலையையும் விற்பனை விலையையும் உயர்த்தி வருகின்றன.
குஜராத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய பால் கூட்டுறவு நிறுவனமான அமுல், தற்போது பாலின் விலையை லிட்டருக்கு ரூ.60 வரை கொடுத்துக் கொள்முதல் செய்கிறது. இதேபோல் பஞ்சாப், ஹரியாணாவில் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள் ரூ.62 வரையிலும், நமது அண்டை மாநிலங்களான தெலங்கானா, கேரளம் போன்ற மாநிலங்கள் ரூ.42 முதல் ரூ.49 வரையிலும் கொடுத்துப் பாலை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கின்றன.
தமிழகத்திலும், பல்வேறு தனியார் பால் நிறுவனங்கள் தற்போது ரூ.42 முதல் ரூ.48 வரை கொடுத்துக் கொள்முதல் செய்கின்றன. அதாவது, தற்போது அரசு அறிவித்துள்ள விலையைவிட, லிட்டருக்கு ஏறக்குறைய ரூ.4 அதிகம் கொடுத்துக் கொள்முதல் செய்கின்றன.
தமிழகத்தில் நாளொன்றுக்கு விற்பனையாகும் சுமார் 150 லட்சம் லிட்டர் பாலில், ஆவின் நிறுவனத்தின் பங்கு 30-35 லட்சம் லிட்டர் மட்டுமே. மீதமுள்ள 80% சந்தையைத் தனியார் பால் நிறுவனங்களும், கிராமப்புற உள்ளூர் விற்பனையாளர்களுமே பூர்த்திசெய்கின்றனர்.
இவ்வளவு பெரிய சந்தை அளவைக் கொண்டுள்ள தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது உயர்த்தும் பால் விலை நுகர்வோரைப் பாதிக்காதபோது, அரசுத் துறையான ஆவின் நிறுவனத்தின் கொள்முதல் விலையை உயர்த்தும்போது மட்டும் ஏன் எதிர்ப்பு வரும் என்று அரசு அச்சம் கொள்கிறது?