

இந்திய நகரங்களில் ஒரு பாதசாரி பாதுகாப்பாக நடைபாதையில் நடப்பதைவிட, நடைபாதையை விட்டுச் சாலைக்குள் இறங்கி நடக்க வேண்டிய நிலையைத்தான் பார்க்க முடிகிறது.
ஒரு கையில் பள்ளிப்பையைத் தூக்கிக்கொண்டு, மறு கையில் குழந்தையைப் பிடித்தபடி நிற்கும் தாய், நடைபாதையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களைச் சுற்றிச் சாலையில் இறங்கிச் செல்கிறார்.
சேதமடைந்த நடைபாதையைப் பார்த்துப் பயந்துபோன ஒரு முதியவர் சாலையில் இறங்கி நடக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இப்படி நடைபாதையை ஆக்கிரமித்திருக்கும் கடைகள், குப்பைகள், திறந்துகிடக்கும் சாக்கடைகள், இருசக்கர வாகனங்கள், விளம்பரப் பலகைகள்... இவை அனைத்தும் சேர்ந்து நடைபாதையை வெறும் பெயரளவிலான வசதியாக மாற்றியிருக்கின்றன.
நடைப்பயணம் ஓர் அடிப்படை உரிமை
நடைபாதை என்பது நகராட்சி விருப்பத்துக்குரிய வசதி அல்ல; அரசமைப்புச் சட்டம் உறுதிப்படுத்திய மக்களின் அடிப்படை உரிமை என்பதை உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கிய முக்கியமான தீர்ப்பு வலியுறுத்தியுள்ளது.
பாதுகாப்பான நடைபாதை, பாதசாரிகளின் உயிருடன் நேரடியாகத் தொடர்புடையது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மாநில அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகளும் நடைபாதைகளை உருவாக்கிப் பராமரிப்பதற்கான தெளிவான கொள்கைகளை வகுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
காரணம், நடக்க முடியாத நகரம் நோய்களை உருவாக்குகிறது. இந்தியா இப்போது வேகமாக நகரமயமாகிவரும் நாடு. ஆனால், அதே வேகத்தில் மக்களுக்கு உடல் உழைப்பு குறைந்துவருகிறது.
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், கொழுப்புக் கல்லீரல் நோய் போன்ற வாழ்க்கைமுறை நோய்கள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. இந்த நோய்களைத் தடுப்பதற்கான மிக எளிய, மிகக் குறைந்த செலவுடைய மருந்து நடைப்பயிற்சி ஒன்றுதான்.
ஆனால், உலகச் சுகாதார அமைப்பின் இந்திய உடல் இயக்கத் தரவுகள் கவலைக்குரிய உண்மையைச் சுட்டிக்காட்டுகின்றன. இந்தியாவில் வயது வந்தோரில் கிட்டத்தட்ட பாதிப் பேர் பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு உடற்பயிற்சி செய்வதில்லை.