

தமிழ்நாடு ஒரு வெப்ப மண்டல மாநிலம். ஆனால், தற்போதைய கோடைக்காலம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கொடியதாக மாறிக்கொண்டிருக்
கிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) 2026ஆம் ஆண்டு கோடை முன்னறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 15 நாள்களுக்கு வெப்ப அலை நிலவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டுகளைவிட இரண்டு மடங்கு அதிகம். இதை வெறும் வானிலை முன்னெச்சரிக்கையாக மட்டும் கருதாமல் மக்களின் உடல்நல, வாழ்வாதார, பொருளாதாரப் பிரச்சினையாகப் பார்ப்பது அவசியம்.
வெப்பத்தின் சத்தமில்லா வளர்ச்சி
வெப்ப அலை என்றதும் நம் நினைவுக்கு வருவது கொளுத்தும் பகல் நேர வெயில் மட்டுமே. ஆனால் ‘இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் கிளைமட்டாலஜி’ இதழில் வெளியான ஆய்வு ஒன்று, இரவில் அதிக வெப்பம் நிலவும் பகுதிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துவருவதாகச் சுட்டிக்காட்டுகிறது.
2005–2015 காலக்கட்டத்தில் இரவு வெப்பம் 26–27 டிகிரி செல்சியஸ் ஆக இருந்த தமிழ்நாட்டு ஊராட்சி ஒன்றியங்கள் வெறும் 6 ஆக இருந்த நிலையில், தற்போது அவை 80 ஆக உயர்ந்துள்ளன (தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் சமீபத்திய மதிப்பீடு).
சென்னையில் கட்டிடப் பரப்பு 1985இல் 48 சதவீதமாக இருந்தது, இன்றைக்கு 74 சதவீதமாக உயர்ந்துள்ளது. நகர்ப்புற வெப்பத் தீவு விளைவால் அதிகரித்த இந்த இரவு நேர வெப்பநிலை கிட்டத்தட்ட 4 டிகிரி செல்சியஸ்வரை உயர்ந்துள்ளது.
ஈரப்பதமும் அபாயகரமாக உயர்ந்துவருகிறது. கடந்த பத்தாண்டுகளில், ஒப்பீட்டளவில் முன்பு வறண்டிருந்த பகுதிகளில் ஈரப்பதம் 10 சதவீதம்வரை அதிகரித்துள்ளது. வியர்வை ஆவியாகாமல் போகும்போது, உடலால் குளிர்ச்சியடைய முடியாது.
வெப்பமானி 38 டிகிரி செல்சியஸ் காட்டினால், நம் உடல் உணரும் வெப்பம் 43 டிகிரி செல்சியஸாக இருக்கும். தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் நிலவும் இந்த ஈரப்பதமானது, வெப்பத்தால் ஏற்படும் தாக்கத்தின் அபாயத்தை மனிதர்களுக்குப் பன்மடங்கு உயர்த்துகிறது.