

தமிழ்நாட்டில் அமைந்துள்ள புதிய ஆட்சி பொது நிதி மேலாண்மை தொடர்பாக அண்மையில் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதிகரித்துவரும் பொதுக் கடன், வருவாய்ப் பற்றாக்குறை, நிதி நிர்வாக முடிவெடுத்தலில் உள்ள நெகிழ்ச்சியற்ற தன்மை போன்றவற்றை முக்கியப் பேசுபொருளாக இந்த அறிக்கை முன்வைத்திருக்கிறது.
வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, பொதுக் கடனுக்கும் மாநில உள்நாட்டு உற்பத்திக்குமான விகிதாசாரம், வட்டி செலுத்தும் விகிதங்கள், மூலதனச் செலவு, மாநில அரசின் இதரப் பொறுப்புகள் போன்ற குறியீடுகள் இதன் தயாரிப்புக்கு மையமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, அரசியல் எல்லைகளைக் கடந்த - அரசின் நிதி மேலாண்மை குறித்த ஆவணமாக இது வெளிவந்துள்ளது.
கேள்விகளும் காரணிகளும்
2020-21இல் ரூ.5.13 லட்சம் கோடியாக இருந்த பொதுக் கடன், ஐந்தே ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்து ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளது. மாநிலத்தின் பொதுக் கடன் 2014-15இல் அதிகரிக்கத் தொடங்கியது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வருவாய்ப் பற்றாக்குறை ரூ.78,320 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த நிதி அழுத்தத்தைப் பற்றியும் நிதி மேலாண்மையைப் பற்றியும் பேசுவது இந்த அறிக்கையின் மையம். அரசின் நீண்டகால நிதிச் சுமை என்ன என்பதையும் தெளிவாக விவரித்துள்ளது.
அதிகரித்துவரும் ஓய்வூதியச் செலவுகள், மூத்த குடிமக்களின் தொகை அதிகரித்துவருவதை மேலாண்மை செய்ய வேண்டியதன் அவசியம், அதிகப் பொதுச் செலவு, பொதுத் துறை நிறுவனங்களின் நிதி நெருக்கடி நிலை, வருவாய் ஆதாரங்களைத் தேடுவதில் உள்ள சிரமங்கள் போன்ற பொதுவான நிதிச் சுமைகளையும் அதற்கான மேலாண்மையையும் வெள்ளை அறிக்கை கருத்தில் கொண்டுள்ளது.
கடன் வாங்கித்தான் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா என்பதைத் தாண்டி, ‘மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் கடன் சுமை அதிகரித்துள்ளதா?’, ‘வாங்குகின்ற கடன் பயனுள்ள சொத்து வாங்கப் பயன்படுகிறதா, வளர்ச்சி சார்ந்த பணிகளுக்குச் செலவிடப்படுகிறதா?’ என்பது போன்ற கேள்விகளும் எழுப்பப்பட வேண்டும்.
இதற்குப் பொதுக் கடனுக்கும், மாநிலத்தின் மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்துக்கும் இடையிலான தொடர்பை அறிந்துகொள்வது அவசியம். இவ்விரண்டின் விகிதாச்சாரம் தமிழ்நாட்டில் 28.3%. இது, நிதிப் பொறுப்புணர்வு, வரவு-செலவு மேலாண்மைச் சட்ட விதிமுறையைக் காட்டிலும் அதிகம்.