பேரவைத் தேர்தல் 2026: அனலாகத் தகிக்கும் மேற்கு வங்கத் தேர்தல் களம்

திரிணமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் - ஒன்றையொன்று சாடுகின்றன
பேரவைத் தேர்தல் 2026: அனலாகத் தகிக்கும் மேற்கு வங்கத் தேர்தல் களம்
Updated on
3 min read

ஏப்ரல் 23இல் முதல் கட்ட வாக்குப் பதிவை எதிர்கொண்டிருக்கும் மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தல் களம், அனலாகத் தகிக்கிறது. வழக்கமாகப் பல கட்டங்களாக நடத்தப்படும் மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தல், இந்த முறை இரண்டே கட்டங்களாக நடத்தப்படுவது கவனம் ஈர்க்கிறது. ஆனால், வங்க மண்ணின் அரசியல் களத்துக்கே உரிய பரபரப்புக் காட்சிகளுக்கு இந்தத் தேர்தலும் விதிவிலக்கல்ல.

2011-லிருந்து முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் மம்தா பானர்ஜியைத் தோற்கடிக்க பகீரத முயற்சியில் இறங்கியிருக்கிறது பாஜக. இண்டியா கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸுடன் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, தனித்துக் களம் காண்கிறது. 2021 தேர்தல் தோல்வி அதிருப்தியால் இடதுசாரிகள் இந்த முறை காங்கிரஸுடன் இல்லை.

​போ​தாக்​குறைக்கு, திரிணமூல் காங்கிரஸிலிருந்து வெளியேற்​றப்பட்ட ஹுமாயுன் கபீரின் ‘ஆம் ஜனதா உன்னாயன்’ கட்சி​யுடன் கைகோத்​திருந்த அசதுதீன் ஒவைஸியின் ஏஐஎம்​ஐஎம், அக்கட்​சி​யுடனான முரண்​பாட்டால் தனித்துப் போட்டி​யிடு​கிறது.

இப்படிக் கட்சிகளும் கூட்ட​ணி​களும் ஒன்றுக்​கொன்று மோதிக்​கொள்​வதை​விடவும் அதிகம் பேசுபொருளானது தேர்தல் ஆணையத்​துடனான மம்தாவின் மோதல்​தான். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR) மூலம், 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்​பட்​டிருப்பது இந்தத் தேர்தலின் முதன்மைப் பிரச்சினை ஆகியிருக்​கிறது.

பாஜகவின் வியூகங்கள்

2016 சட்டமன்றத் தேர்தலில் மூன்றே இடங்களில் வென்றிருந்த பாஜக, 2021 தேர்தலில் 77 இடங்களைக் கைப்பற்​றியது. மம்தாவின் நம்பிக்​கையைப் பெற்ற தலைவராக இருந்த சுவெந்து அதிகாரி, கருத்து முரண்​பாட்டால் பாஜகவுக்குத் தாவினார். மம்தா முதல்வர் பதவிக்கு வருவதற்கு முக்கியக் காரணமாக இருந்த நந்தி​கிராம் போராட்​டத்தில் முதன்​மை​யாகப் பங்களித்த சுவெந்து, 2021 தேர்தலில் நந்தி​கி​ரா​மிலேயே போட்டி​யிடுமாறு மம்தாவுக்கு சவால் விடுத்​ததுடன் 1,956 வாக்குகள் வித்தி​யாசத்தில் அவரைத் தோற்கடித்தும் காட்டி​னார்.

அதிர்ச்​சி​யடைந்த மம்தா, முதல்​வ​ராகப் பொறுப்​பேற்ற பின்னர் பவானிபூர் தொகுதி இடைத்​தேர்​தலில் வென்றார். இந்த முறை பவானிபூரில் மீண்டும் மம்தா போட்டி​யிடு​கி​றார். நந்தி​கி​ராமில் திரிணமூல் காங்கிரஸின் பபித்ரா கரை எதிர்​கொள்ளும் விடாக்​கண்டர் சுவெந்து, பாஜக தலைமை கேட்டுக்​கொண்​டதால் பவானிபூரிலும் போட்டி​யிடு​கி​றார்.

‘கட்சி என்ன சொன்னாலும் கட்டுப்​படு​கிறேன்’ எனப் பணிவு முகம் காட்டி​னாலும், இந்த முறை பாஜக வென்றால் தனக்குத்தான் முதல்வர் பதவி கிடைக்கும் என்கிற நம்பிக்​கையில் சுவெந்து இருக்​கி​றார். 2021 தேர்தலில், மொத்தம் உள்ள 294 தொகுதி​களில் திரிணமூல் காங்கிரஸுக்கு 213 இடங்கள் கிடைத்தன.

இடதுசாரிக் கட்சிகள், காங்கிரஸ், இந்திய மதச்சார்​பின்மை முன்னணிக் கட்சி (ஐஎஸ்​எஃப்) அடங்கிய சம்யுக்தா மோர்ச்சா கூட்ட​ணியில் காங்கிரஸுக்கு ஒன்று, ஐஎஸ்எஃபுக்கு ஒன்று என இரண்டே இடங்கள்தான் கிடைத்தன. இடதுசா​ரி​களுக்குக் கிடைத்தது பூஜ்ஜி​யம்​தான். மறுபுறம், மேற்கு வங்கத்தில் முதலில் எதிர்க்​கட்​சி​யாவது, பின்னர் ஆட்சியைப் பிடிப்பது என வியூகம் வகுத்த பாஜக, வெற்றியைக் குறிவைத்துக் கடுமையாக உழைத்​து​வ​ரு​கிறது.

மக்கள்​தொகையில் கிட்டத்தட்ட 27 - 30 சதவீதம் முஸ்லிம்​களைக் கொண்ட மேற்கு வங்கத்​தில், வங்கதேசத்​தி​லிருந்து குடியேறிய​வர்கள், மயன்மாரின் ரோஹிங்க்​யாக்கள் தொடர்பான பிரச்​சினையைத் தொடர்ந்து முன்னெடுக்​கிறது பாஜக. பொது சிவில் சட்டம், வங்கதேச எல்லையில் தடுப்பு வேலி போன்ற வாக்குறு​தி​களையும் பாஜக முன்வைத்​திருக்​கிறது.

டார்ஜிலிங் பகுதியில் தனி கூர்க்​காலாந்து அமைக்கக் கோரி 1980களிலிருந்து போராட்​டங்கள் நடைபெற்​று​வரும் நிலையில், பாஜக ஆட்சிக்கு வந்தால் அந்தப் பிரச்​சினையைத் தீர்க்க முன்னுரிமை கொடுக்​கப்​படும் என்று அமித் ஷா உறுதி அளித்​திருக்​கி​றார். கூடவே, இது தொடர்பான பேச்சு​வார்த்​தைகளுக்கு மம்தா முட்டுக்​கட்டை போட்ட​தாகவும் விமர்​சித்​திருக்​கி​றார்.

கிடைக்கும் வாய்ப்​பு​களில் எல்லாம் திரிணமூல் காங்கிரஸைத் திணறடிக்க பாஜக முயல்​கிறது. பாலியல் வன்கொடுமை செய்யப்​பட்டுக் கொல்லப்பட்ட ஆர்.ஜி.கர் மருத்​துவமனை பெண் மருத்​து​வரின் தாய்க்கு பானிஹாட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்​பளித்​திருப்பது ஓர் எடுத்​துக்​காட்டு!

மனம் தளராத மம்தா

வாக்காளர் பட்டியலிலிருந்து 91 லட்சம் பேர் நீக்கப்​பட்​டிருப்பது இந்தத் தேர்தலின் முக்கியப் பிரச்​சினையாக எதிரொலிக்​கிறது. சரியாக வேலை செய்கிறதா எனச் சோதித்​தறியப்படாத மென்பொருள் ஒன்றை வைத்து இந்தப் பணி மேற்கொள்​ளப்​பட்​டிருப்​ப​தாகப் புகார்கள் எழுந்​திருக்​கின்றன. விளையாட்டுப் பிரபலங்கள், உயரதி​காரிகள், காவல் துறையினர்... ஏன் எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபட்​டிருந்த வாக்குச்​சாவடி அலுவலர்​களின் பெயர்​களும் விடுபட்​டிருக்​கின்றன.

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் முர்ஷி​தா​பாத், மால்டா, வடக்கு 24 பரகனா, தெற்கு 24 பரகனா மாவட்​டங்​களில் லட்சக்​கணக்​கானோரின் பெயர்கள் விடுபட்​டிருக்​கின்றன. அதேபோல், வங்கதேசத்​தி​லிருந்து வந்த தலித் சமூகத்​தினரான மதுவா சமூகத்தைச் சேர்ந்த பலருக்கும் வாக்குரிமை பறிபோ​யிருக்​கிறது.

இதனால், பெரும்​பாலும் பாஜக ஆதரவு மனநிலை கொண்ட மதுவாக்கள் இந்த முறை அக்கட்சி மீது அதிருப்தி அடைந்​திருக்​கின்​றனர். நிலைமையைப் புரிந்​து​கொண்ட பாஜக, அதிகாரி​களின் ஒரு பிரிவினருடன் கூட்டு சேர்ந்து மதுவாக்​களின் பெயர்​களை வாக்காளர் பட்டியல் பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்​றத்தில் நேரடியாக வாதாடியதன் மூலம் தனது பிம்பத்தை உயர்த்​திக்​கொண்​டிருக்​கிறார் மம்தா.

பிஹார், ராஜஸ்​தான், உத்தரப்​பிரதேசம் போன்ற மாநிலங்​களைச் சேர்ந்​தவர்​களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்​திருப்​ப​தாகவும் அவர் குற்றம்​சாட்​டி​யிருக்​கி​றார்.

இறுதியாக, மேல்முறை​யீட்டுத் தீர்ப்​பா​யங்​களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஏற்றுக்​கொள்​ளப்​பட்​ட​வர்கள், மேற்கு வங்கத் தேர்தலில் வாக்களிக்​கலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்​துள்ளது. எனினும், இதில் வெகு சிலரே பயனடைவர்; மிகக் குறைந்த நாள்களே எஞ்சி​யிருக்கும் நிலையில் அனைவராலும் தீர்ப்​பா​யங்கள் மூலம் தீர்வு பெற முடியுமா என்னும் கேள்வி எழுந்​திருக்​கிறது.திரிணமூல் காங்கிரஸ் நீக்கி​யுள்​ள​தாகக் குற்றம்​சாட்​டி​யிருக்​கிறது.

தொகுதி வரையறை மசோதாவுடன் தொடர்​புடையதாக முன்வைக்​கப்பட்ட பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை, திரிணமூல் உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சிகள் தோற்கடித்த நிலையில், அக்கட்​சிகள் பெண்களின் அரசியல் பிரதி​நி​தித்​து​வத்​துக்கு எதிரானவை என்கிற முழக்​கத்தை பாஜக முன்னெடுத்​திருக்​கிறது.

ஆனால், திரிணமூல் நாடாளுமன்ற உறுப்​பினர்​களில் 37% பேர் பெண்கள் எனச் சுட்டிக்​காட்​டி​யிருக்கும் மம்தா பானர்ஜி, தொகுதி வரையறை மசோதா​வானது பெருமளவில் வாக்காளர்களை நீக்கவும் என்.ஆர்​.சி.யை நடைமுறைப்​படுத்​தவும் பாஜக மேற்கொண்ட சதி என்று குற்றம்​சாட்​டி​யிருக்​கி​றார்.

2021 தேர்தலின்​போது, ‘தீதி... ஓ தீதி!’ என்று மம்தாவை பிரதமர் மோடி பலமுறை சீண்டி​னார். 49.1 சதவீதம் பெண் வாக்காளர்​களைக் கொண்ட மேற்கு வங்கத்​தில், மோடியின் இதுபோன்ற பேச்சுக்கள் மம்தாவுக்கு மேலும் ஆதரவைத் திரட்டவே பயன்பட்​டிருந்தன என்பது கவனிக்​கத்​தக்கது.

தேர்தல் நெருங்​கிவரும் நிலையில், ‘மாத்ரி சக்தி பரோசா’ என்னும் பெயரில் பெண்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கும் திட்டத்​துக்கான அட்டை விநியோகிக்​கப்​படுவது வாக்காளர்​களுக்கு பாஜக கொடுக்கும் லஞ்சம் எனச் சீறியிருக்​கிறார் மம்தா.

2021 தேர்தலிலும் பாஜகவினரை ‘வெளி​யாட்கள்’ என்றே விளித்துப் பரப்புரை செய்த திரிணமூல் காங்கிரஸ், பாஜகவினர் வங்க மண்ணின் பண்பாட்​டுக்கு எதிரான​வர்கள் என்றும் பாஜக ஆளும் மாநிலங்​களில் மீனவர்கள், மீன் விற்பவர்கள் தாக்கப்​படு​கி​றார்கள் என்றும் பிரச்​சாரம் செய்கிறது.

பாஜகவும் காங்கிரஸும் கூட்டு என திரிணமூல் காங்கிரஸும், மோசமான ஆட்சி நிர்வாகத்தால் பாஜகவை மம்தா வளரவிட்டதாக ராகுல் காந்தி​யும், முஸ்லிம்​களுக்கு எதிரான பாஜகவும் - முஸ்லிம்​களின் வாழ்​வா​தா​ரத்தை மேம்​படுத்தாத திரிணமூல் காங்​கிரஸும் ‘அண்ணன் - தங்கை’ போலச் செயல்​படு​வதாக ஒவைஸியும் சகட்​டுமேனிக்கு விமர்​சித்​திருப்​பதால் இந்தத் தேர்தல் களம் தகித்​துக்​கொண்டே இருப்​பதில் வியப்​பில்லை!

- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

பேரவைத் தேர்தல் 2026: அனலாகத் தகிக்கும் மேற்கு வங்கத் தேர்தல் களம்
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in