சுஸ்மிதா கிரேவால் எழுதிய ‘Courtship is back. But Something’s Changed’ என்னும் கட்டுரை ‘தி இந்து’ (30.08.2026) ஆங்கில நாளிதழின் இணைப்பிதழில் வெளியாகிருந்தது.
‘கோர்ட்’ என்பது அரசரின் அவைக்களம், சரி; ‘கோர்ட்ஷிப்’ (Courtship) என்பது? ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளும் முடிவோடு பழகிக்கொள்வது. அதற்கும் அவைக்களத்துக்கும் என்ன தொடர்பு? ஆணும் பெண்ணும் பழகிக்கொள்ளும் வாய்ப்பை அவைக்களமே உருவாக்கித்தரும் என்பதுதான் தொடர்பு.
நீதியும் நிர்வாகமும் நிகழ்த்தப்படும் இடம் அல்லவா அவைக்களம்? இடைக்கால ஐரோப்பாவில், மேட்டிமைக் குடும்பங்கள் கலந்துறவாடும் சமூகவெளியாகவும் அது இருந்தது.
பருவம் எய்திய பெரிய இடத்துப் பெண்களையும் ஆண்களையும் தகுதிப்படி இணைசேர்ப்பதை இடைக்காலத்து ஐரோப்பிய அரசுகள் கடமையாகக் கருதின. அதற்காகவே தமது அவைகளில் நடன விருந்துகளை நடத்தின. அவற்றில் மகன்கள்-மகள்களோடு பங்கேற்கும் மேட்டிமைக் குடும்பத்தினர், அதற்கென்றே தங்கள் பிள்ளைகளுக்கு நடனம், நாகரிகம், நடைமுறையைப் பழக்கினார்கள்.
நாட்டாண்மைக் காதல்
அவைக்கள இணைநடனங்களில், இயல்பாகவும் கணக்குப் பார்த்தும் ஆண்களும் பெண்களும் ஒருவரை யொருவர் கவர முயல்வார்கள். கவர்ந்துகொண்டவர்கள் தொடர்ந்து பழகி, திருமணத்தை நோக்கி நகர்வார்கள்.
அத்திருமணம் வெறும் ஆண்-பெண் உறவுப்பிணைப்பாக மட்டும் இல்லாமல், இரண்டு பெருந்தனக் குடும்பங்களின் பொருளியல் இணைப்பாகவும், அரசுக்கும் ஆதாயம் தரக்கூடிய அரசியல் இணைப்பாகவும் நிகழும். இதுதான் கோர்ட்ஷிப்; நாட்டாண்மைக் காதல்.