

‘மெய்யியல் என்பது, ஒரு மனிதர் தன்னைச் சாவுக்குத் தயார் செய்துகொள்வது என்பதைத் தாண்டி வேறொன்றுமில்லை’ என்று தன்னுடைய கட்டுரையைத் தொடங்குகிறார், 16ஆம் நூற்றாண்டு பிரெஞ்சு மறுமலர்ச்சி மெய்யியலாளர் மீஷெல் த மாண்டெய்ன் (Michel de Montainge).
அந்தக் கட்டுரையில் சாக்ரட்டீஸுக்கு மரணதண்டனை விதித்தபோது நிகழ்ந்ததைச் சொல்கிறார்: ‘நம்மை ஆளும் முப்பது கொடுங்கோலர்கள் உனக்குச் சாவைத் தண்டனையாக விதித்திருக்கிறார்கள் சாக்ரட்டீஸ்!’ என்று தன்னிடம் சொன்னவருக்கு சாக்ரட்டீஸ் மறுமொழி சொல்கிறார்: ‘சாவைத்தான் இயற்கையே நமக்கு விதித்திருக்கிறதே! அப்படி இருக்கையில், அதற்காகக் கவலைப்படுவதும் பதற்றம் அடைவதும் பொருளற்றது இல்லையா? இன்பம், துன்பம் எல்லாவற்றையும் பிறப்பு தொடங்கிவைக்கிறது; சாவு முடித்துவைக்கிறது.
அவ்வளவுதானே?’ வாழ்வது எப்படி என்பது வாழும் கலை ஆவது போலவே, சாவது எப்படி என்பது சாகும் கலை ஆகிறது. ஆனால், அது நாம் கற்க விரும்பும் கலை இல்லை. அது நம்மைச் சுற்றி நிகழ்வதைப் பார்த்துக்கொண்டும், இழந்தவர்களுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டும் இருக்கிறோம்.
நம்மை அது நெருங்கும்போதோ அஞ்சுகிறோம். புத்தர் தன் சாவைப் பதற்றமில்லாமல் எதிர்கொண்டிருக்கிறார். வாழ்வில் ஐந்து செய்திகளை நினைவில் வைத்துக்கொள்ளுமாறு பௌத்தம் அறிவுரைக்கிறது: (1) முதுமை வரும்; (2) நோய் வரும்; (3) சாவு வரும்; (4) பிரிவு வரும்; (5) செய்தவை எல்லாவற்றுக்கும் பலன்கள் வரும். எப்போது வேண்டுமானாலும் வந்துவிடக்கூடிய சாவை அயராமல் சந்திப்பதைச் ‘சாகும் கலை’, ‘மரணத்தை மனம் கொள்ளுதல்’ என்று ஒரு பயிற்சியாகவே பௌத்தம் முன்வைக்கிறது.
இறப்புக்கு அனுமதி
இருக்கட்டும். ஹரிஷ் ராணா என்கிற இளைஞர் எதிர்பாராதவிதமாக நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டார். மோசமான தலைக்காயங்களால் செயலற்ற நிலைக்குப் போய்விட்டார்.
13 ஆண்டுகளாகப் பெற்றோர் மருத்துவம் பார்க்கிறார்கள். முன்னேற்றம் இல்லை. மீண்டு எழுவதற்கு எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், உயிர்காக்கும் கருவிகளால் மட்டுமே அவரது உயிர் தக்கவைக்கப்பட்டது.