

பரந்தூர் புதிய விமானநிலையத் திட்டம் குறித்து ஆதரவுக் குரல்களும், எதிர்ப்புக் குரல்களும் தொடர்ந்து ஒலிப்பதைப் பார்த்துவருகிறோம். இந்நிலையில், இந்தத் திட்டம் பரிந்துரைக்கப்படும் இடத்துக்கான நீரியல் ஆய்வு தொடர்பாக அண்மையில் வெளியாகியிருக்கும் அறிக்கை, அறிவியல் அடிப்படையிலான பல முக்கியத் தரவுகளை வெளிக்கொண்டு வந்துள்ளது.
கூவம் வடிநிலம் எங்கே? - ‘உவகை ஆய்வு அறக்கட்டளை’ வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கை, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள 5,379 ஏக்கர் பரப்பளவிலான இந்நிலத்தை நீரியல்நோக்கில் விரிவாக மதிப்பாய்வு செய்திருக்கிறது.
குறிப்பாக, இத்திட்டம் குறித்துத் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) வழங்கியுள்ள முன் சாத்தியக்கூறு அறிக்கையையும் (Pre-feasibility Report) அப்பகுதியில் உள்ள பாலாறு, அடையாறு, கூவம் வடிநிலப் பகுதிகளுக்கான நீரியல் நிலைகளையும் ஆய்வு செய்திருக்கிறது.
கடந்த ஏப்ரல் 2024இல் டிட்கோ வழங்கிய இந்த அறிக்கையின் அடிப்படையில், இந்தத் திட்டத்துக்கான பல முக்கிய ஒப்புதல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இவ்விடத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகள்/ ஈரநிலங்கள் ஆகியவற்றைக் கருத்தில்கொள்ளாமல், ‘இப்பகுதியில் இயற்கையான, பாதுகாக்கப்பட்ட ஈரநிலங்கள் ஏதும் இல்லை’ எனக் குறிப்பிட்டிருப்பதை உவகை ஆய்வு அறக்கட்டளையின் நீரியல் அறிக்கை மிகுந்த அதிர்ச்சியோடு பதிவுசெய்திருக்கிறது.