

ஜனவரி 24 அன்று வெள்ளை மாளிகை ஒரு பகடிப் படத்தை (meme) வெளியிட்டது. படத்தில் ஒரு பென்குவினைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். பென்குவினின் கையில் அமெரிக்கக் கொடி. தூரத்துப் பனிமலையில் கிரீன்லாந்தின் கொடி. படம் தரும் செய்தி தெளிவானது - ‘டிரம்ப்புக்கு கிரீன்லாந்து வேண்டும்’.
அதிபரின் ஆசை: கிரீன்லாந்து, டென்மார்க்கின் ஆளுகையின்கீழ் இயங்கும் ஒரு சுயாட்சிப் பகுதி. உலகின் ஆகப் பெரிய தீவு. 80% பரப்பை அடர்பனி நிரந்தரமாக மூடியிருக்கும். டிரம்ப்புக்கு கிரீன்லாந்தின் மீது எப்போதுமே ஒரு கண் இருந்து வந்திருக்கிறது. அதைப் பலமுறை சொல்லியும் இருக்கிறார். கடந்த மாதத்தின் (ஜனவரி 2026) இடைப் பகுதியில், தனது வேட்கையை அவர் மீண்டும் வெளிப்படுத்தினார்.
அவசியமானால் ஆயுதமும் ஏந்துவோம் என்றார். இதை எதிர்க்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கங்களான டென்மார்க், நார்வே, ஸ்வீடன், ஃபிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பின்லாந்து ஆகிய ஏழு நாடுகள் மீதும், எட்டாவதாக பிரிட்டன் மீதும், 10% இறக்குமதித் தீர்வை விதிக்கப்போவதாக அறிவித்தார்.
இந்தத் தீர்வை பிப்ரவரி 1ஆம் நாள் நடைமுறைக்கு வரும். ஜூன் 1ஆம் நாள், தீர்வை 25%ஆக உயரும் என்றார். ஐரோப்பிய நாடுகளில் சில அமெரிக்காவை நோக்கி ஓங்கியும், வேறு சில ஒடுங்கியும் எதிர்வினையாற்றின. அடுத்த சில நாள்களில் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) மாநாட்டில் தீர்வைகளுக்கான அறிவிப்பை டிரம்ப் பின்வலித்துக்கொண்டார்.
படையெடுப்பும் இராது என்றார். எனினும், கிரீன்லாந்தை மட்டுமல்ல, ஆர்க்டிக் பகுதி முழுவதற்குமான ஒரு திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அது என்ன திட்டம், அதற்கான கால வரையறை யாது என்பதை நாம் வெள்ளித்திரையில் கண்டுகொள்ளலாம். ஆனால், படம் எப்போது வெளியாகும் என்பது தெரியவில்லை. பென்குவின் படம் அதற்கான முன்னோட்டமாக இருக்கலாம்.
காரணிகள்: டிரம்ப்புக்கு ஏன் கிரீன்லாந்து மீது இவ்வளவு நாட்டம்? இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவது, கிரீன்லாந்து வட அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் ஆர்க்டிக் பெருங்கடலில் மிதக்கிறது. இங்கிருந்து ஆர்க்டிக் பகுதி முழுவதையும் கண்காணிக்க முடியும். இது தனது பாதுகாப்புக்கு அவசியமானது என்கிறது அமெரிக்கா.