ரகு ராய்: இந்தியாவின் ஆன்மாவைக் காட்சிப்படுத்தியவர் | அஞ்சலி

அவரது ஒளிப்படங்கள் தனித்துவமான தரிசன அனுபவத்தைத் தருபவை
 ரகு ராய்: இந்தியாவின் ஆன்மாவைக் காட்சிப்படுத்தியவர் | அஞ்சலி
Updated on
2 min read

இந்திய ஒளிப்படக் கலையுலகின் பேரொளியாகத் திகழ்ந்த ரகு ராய் மறைந்துவிட்டார் என்கிற செய்தி என்னைப் பெரிதும் உலுக்கியது. ஓர் இளம் ஒளிப்படக் கலைஞராக என் பயணத்தில் அவருடைய படைப்புகள் வழிகாட்டியாக இருந்தன; இன்று அந்த ஒளியே நிழலாகிவிட்டது போல உணர்கிறேன்.

அவர் எடுத்த ஒவ்வொரு ஒளிப்படமும் ஒரு கதையைச் சொன்னது மட்டுமல்ல, அந்தக் கதைக்குள் நம்மையும் அழைத்துச் சென்றது. ஒரு காட்சியைப் பதிவுசெய்வதால் எப்படி ஓர் உணர்வை உருவாக்க முடியும் என்பதை அவரின் படைப்புகளிலிருந்துதான் நான் முதலில் கற்றுக்கொண்டேன்.

பயணம் தொடங்கியது

1942 டிசம்பர் 18 அன்று பஞ்சாபில் உள்ள ஜங்க் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) நகரில் பிறந்த ரகு ராய், சிவில் பொறியாளராகப் பட்டம் பெற்றவர்.

ஆனால், 23ஆவது வயதில் அவரது அண்ணன் மூலம் கேமராவுடன் பரிச்சயம் ஏற்பட்ட பின்னர், அவரது வாழ்க்கைப் பயணம் புதிய திசைக்குத் திரும்பியது; ஒரு வகையில், அது இந்திய ஒளிப்படக் கலையிலும், இதழியல் துறையிலும் வெளிச்ச வெள்ளத்துக்கான சிறு துளியாகவும் அமைந்தது.

ஒளிப்படக் கலையில் மிளிரத் தொடங்கிய ரகு ராய், செய்தி ஒளிப்படக் கலைஞராக ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழில் பணியைத் தொடங்கினார். சில மாதங்களுக்குப் பின், அதிலிருந்து விலகி, சில நண்பர்களுடன் சேர்ந்து சிறிது பணம் திரட்டி, ஒரு மாலைப் பத்திரிகையை உருவாக்க முயன்றார்.

அதில் வெற்றி கிடைக்காத நிலையில், ‘தி ஸ்டேட்ஸ்மேன்’ நாளிதழில் முதன்மை ஒளிப்படக் கலைஞராகச் சேர்ந்தார். அதன் பின்னர் ‘சண்டே’ இதழில் பணியாற்றிய அவர், பின்னர் ‘இந்தியா டுடே’ இதழில் ஒளிப்பட ஆசிரியராகப் (picture editor) பணியாற்றினார்.

காலப்போக்கில், இந்தியாவின் ஆன்மாவைக் காட்சிப்படுத்திய ஒரு தலைசிறந்த ஒளிப்படப் பத்திரிகையாளராகவும் பதிப்பாசிரியராகவும் உயர்ந்தார். “ஒரு பத்திரிகை நிறுவனத்தில் இணைந்து பணிபுரிவதால் சில தனிப்பட்ட பலன்கள் உண்டு.

பத்திரிகையோ இதழோ அதன் ஒரு பகுதியாக இருந்தால், நிகழ்வுகளையும் மனிதர்களையும் எளிதில் அணுக முடியும். ஆனால், இந்தியாவில் பெரும்பாலும் பத்திரிகைகளும் இதழ்களும் ஒரு குறிப்பிட்ட வடிவத்தையே நாடுகின்றன; அது ஒளிப்படங்களுக்கான ஓர் இறுக்கமான கட்டுப்பாடு.

அதனால், தயாரிப்புக் குழுவினர் என் படங்களை வெட்டித் திருத்துவதற்குப் பதிலாக, நானே அவற்றை அளவிடப்பட்ட இடத்துக்குள் வடிவமைத்துக் கொண்டேன்” என என்னிடம் ரகு ராய் சொன்னதை மறக்கவே முடியாது.

கற்றுத்தந்த படைப்புகள்

இந்திரா காந்தி, தலாய் லாமா, அன்னை தெரசா எனப் பல்வேறு ஆளுமைகளுடன் சாமானிய இந்தியர்கள், இந்தியாவின் தெருக்கள், மூலைமுடுக்குகள் என இந்தியாவின் ஆன்மாவை கேமரா வழியே பதிவுசெய்தவர் ரகு ராய். ஆன்மிகத் தலங்கள் முதல் அரசியல் களங்கள்வரை அவரது கேமரா கோணத்தில் வரலாற்றுச் சுவடுகளாகப் பதிவாகியிருக்கின்றன.

நான் ஒளிப்படம் எடுக்கத் தொடங்கிய காலத்திலேயே, அவரது படங்கள் என் மீது ஆழமாகத் தாக்கம் செலுத்தின. 2016ஆம் ஆண்டு, அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. என் வாழ்க்கையின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றான அது, ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது.

நான் எடுத்த சில ஒளிப்படங்களை அவரிடம் காட்டியபோது, அவர் மிகவும் அமைதியாகப் பார்த்துவிட்டு, சில நிமிடங்கள் யோசித்தார். பிறகு மெதுவாகச் சொன்னார்: “படம் எடுப்பது மட்டும் போதாது... அதைப் பாதுகாப்பது, அதை உயிரோடு வைத்திருப்பதுதான் முக்கியம்.

நாம் எடுக்கும் ஒவ்வொரு படமும் நாளை ஒரு வரலாறு ஆகலாம். எனவே, அதைச் சரியாகச் சேமிக்கவும், தொகுக்கவும், பின்னர் உலகம் பார்க்கும் வகையில் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தவும் வேண்டும்” என்று அவர் சொன்ன வார்த்தைகள் என் பார்வையை முற்றிலும் மாற்றின.

அவர் மேலும் சொன்ன ஒரு விஷயம் என்னை இன்னும் தொடர்ந்து ஊக்குவித்துவருகிறது: “ஒளிப்படம் என்பது நேரத்தை உறைய வைப்பது மட்டும் அல்ல; அது அந்த நேரத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் திறன் கொண்டது”. இந்த எண்ணம், நான் எடுக்கும் ஒவ்வொரு படத்தையும் வேறுபட்ட முறையில் அணுக வைத்தது.

அந்த நாளில் இருந்து, என் படைப்புகளை நான் சும்மா சேமித்து வைக்கவில்லை. அவற்றைத் தொகுத்து, சீரமைத்து, பல்வேறு தளங்களில் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினேன். டிஜிட்டல் காலத்தில், ஓர் ஒளிப்படம் பல வடிவங்களில், பல தலைமுறைகளுக்குச் சென்றடைய முடியும் என்பதை அவர் மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார். அது ஒரு கலைஞனின் பொறுப்பு என்றும் நினைவூட்டினார்.

தரிசன அனுபவம்

அவரைச் சந்தித்தது என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இன்று அவர் இல்லையென்றாலும், அவர் சொல்லிக் கொடுத்த சிந்தனைகள், அவருடைய பார்வை, அவருடைய பொறுப்புணர்வு - இவை எல்லாம் என்னுள் இன்னும் உயிருடன் இருக்கின்றன.

லென்ஸுக்கு அப்பால் ரகு ராய், உணர்ச்சிகரமான இதயம் கொண்ட மனிதர். இசை ரசனை கொண்டவர். ஓர் ஒளிப்படக் கலைஞர், பாரபட்சமற்ற சாட்சியாக இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பியவர். அந்த நம்பிக்கை, அவரின் வங்கதேசத் தொடர்களில் உள்ளார்ந்த உண்மையாகத் தெரிந்தது.

மனித வேதனையை, அமைதியான நயத்துடனும் தெளிந்த கட்டமைப்புடனும், ஆழ்ந்த உணர்வோடும் படம்பிடித்துக் காட்டினார். இன்றைய இளம் ஒளிப்படக் கலைஞர்கள் அவரிடம் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன.

ஓர் ஒளிப்படக் கலைஞர் வெறுமனே கேமரா தொழில்நுட்பக்காரராக மட்டுமல்ல, ஒரு சிந்தனையாளராகவும், ஒரு பொறுப்புள்ள படைப்பாளியாகவும் எப்படித் தம்மை மெருகேற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்கு அவரது வாழ்க்கையே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

“என் கேமரா வழியாக நான் என் கடவுளைச் சந்திக்கிறேன்” என்று ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளார். எனவே, அவரது ஒளிப்படங்கள் தனித்துவமான தரிசன அனுபவத்தைத் தருவதில் வியப்பு ஏதும் இல்லை!

- எஸ்.அருண் குமார், ஒளிப்படக் கலைஞர், சுயாதீன ஊடகர்; தொடர்புக்கு: arun.k.76@gmail.com

 ரகு ராய்: இந்தியாவின் ஆன்மாவைக் காட்சிப்படுத்தியவர் | அஞ்சலி
தனது உருவ பொம்மையை எரித்து காயமடைந்த பாஜக எம்எல்ஏவுக்கு அகிலேஷ் யாதவ் நேரில் ஆறுதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in