

இன்றைய மேற்கத்திய சமூக அரசியல் குறித்த உரையாடல்களில் மிக முக்கியமான இடத்தை வகிப்பவர் ஜெர்மானியத் தத்துவ அறிஞர் யெர்கன் ஹாபர்மாஸ் (Jürgen Habermas).
அண்மையில் மறைந்த ஹாபர்மாஸ், ஜனநாயகம், தொடர்பாடல், பொதுவெளி விவாதம் குறித்துச் சிந்திக்கும் முறையில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு மாபெரும் அறிவு சார்ந்த பாரம்பரியத்தை உருவாக்கியவராக நினைவுகூரப்படுவார்.
போர்முனையிலிருந்து...
இளம் வயதிலேயே ஹிட்லரின் படையில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டுப் போர்முனைக்கு அனுப்பப்பட்டவர் ஹாபர்மாஸ்.
பின்னர், நியூரெம்பர்க் குற்றங்கள் பற்றிய விசாரணையைக் காட்டும் ஆவணப்படத்தைப் பார்க்க நேரிட்டதால், தான் வாழும் போர்ச் சூழலின் அவலத்தைப் புரிந்துகொண்டார்.
பிறகு 1956இல் ஃபிராங்க்ஃபர்ட் சிந்தனையாளர்களில் முக்கியமானவரான அதோர்னோவின் ஆய்வு உதவியாளராகப் பணியில் சேர்ந்த அவர், 1964இல் அந்த ஆய்வுத் துறைக்குத் தலைவராக ஆனார்.
காலப்போக்கில் தன்னுடைய தத்துவப் பாதையை ஜனநாயகம் மீதான அக்கறை மிகுந்ததாக மாற்றிக்கொண்டார்.
அரசியல் தளத்தில் ஜனநாயகப் பண்புகள் கொண்ட புரிதலுடன் இணைந்த அதிகாரப் பகிர்வுதான் அவருடைய அடிப்படை நோக்கமாக இருந்தது.
இதுதான் அவரின் தத்துவம் என்று வரையறுத்துச் சொல்ல முடியாத அளவில் பன்முகத்தன்மை கொண்டது அவருடைய படைப்புலகம்.
சமூக அறிவியலின் எல்லாத் தளங்களுக்கும் பயணம் செய்து பல்வகைக் கருத்தாக்கங்களை உருவாக்கியிருந்தாலும், மனிதர்களின் பரஸ்பரத் தொடர்பைப் பரவலாக்குவது எப்படி என்பது அவருடைய முதன்மையான நோக்கமாக இருந்தது.
அப்படிப்பட்ட பரஸ்பரத்தைச் சமூகத்தில் உருவாக்குவதற்குக் கூட்டுறவுடன் கூடிய விவாதங்களை வளர்ப்பதே உதவும் என்று நம்பினார்.
ஹாபர்மாஸின் தத்துவப் படைப்புகளில் மேக்ஸ்வேபர், எமிலி துர்க்கைம், கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் சிந்தனைகள் அதிகமாகத் தாக்கம் செலுத்தி இருக்கின்றன.
ஹாபர்மாஸின் சிந்தனை வாழ்க்கையை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பார்க்கலாம். ஒன்று, 1968இல் ‘அறிவும் மனித நலன்களும்’ (Knowledge and Human Interests) என்னும் நூலை அவர் எழுதிய காலக்கட்டம்.