

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்திலுள்ள திருப்பைஞ்ஞீலி நீலிவனேசுவரர் கோயில் குடைவரையும் கற்றளியும் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு வளாகமாகும். இக்கோயிலுக்கும் அப்பகுதி மக்களுக்குமான ஒன்பது நூற்றாண்டுக் கால வாழ்வியல் பதிவுகள் இங்குள்ள 71 கல்வெட்டுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றுள் ஒரு குறிப்பிட்ட கல்வெட்டு, வரி செலுத்த முடியாமல் சிலர் ஊரைவிட்டு ஓடியதையும், அதனால் ஏற்பட்ட வரிப் பற்றாக்குறையை ஈடுகட்டப் பொறுப்பாளர்கள் தங்களின் நிலத்தை ஒற்றி வைத்த சுவாரசியமான வரலாற்றையும் நமக்கு எடுத்துரைக்கிறது.
வரியால் உருவான நெருக்கடி: கி.பி. 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சோழ நாட்டை மூன்றாம் இராஜராஜர் ஆண்டு வந்தார். இக்காலத்தில், திருப்பைஞ்ஞீலிக்கு அருகில் பிராமணக் குடியிருப்புகளோடு விளங்கிய துடையூர் என்ற ஊரின் சபை உறுப்பினர்கள் அறுவர் இக்கல்வெட்டு உருவாகக் காரணமாக இருந்துள்ளனர்.
துடையூரிலிருந்து பிரிக்கப்பட்ட சிறுசாத்தமங்கலம் என்ற சிற்றூரில் இவ்வமைப்பினருக்குச் சொந்தமான விளைநிலங்கள் இருந்தன. அக்கால வருவாய்ப் பதிவேடுகளின்படி, இந்தச் சிறுசாத்தமங்கலம் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேவதான நிலமாக, இறைவனின் பெயரிலேயே பதிவாகியிருந்தது.