

‘அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் 1995இல் வெடிகுண்டு வெடித்தபோது, ஊடகங்களிடம் இருந்து எனக்குக் குறைந்தது 25 அழைப்புகள் அடுத்தடுத்து வந்தன. அனைவரும் தெரிந்துகொள்ள விரும்பியது ஒன்றுதான் - ‘நீங்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ உண்மையில் இந்தக் கேள்வியை என்மீது தொடுக்கப்பட்ட மாபெரும் தாக்குதலாகவே காண்கிறேன்’ என்கிறார் எட்வர்ட் செய்த்.
ஏன் செய்த் அவ்வாறு நினைக்க வேண்டும்? இஸ்லாமிய உலகம் குறித்துப் பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியவர். பேராசிரியராகவும் அறிவுஜீவியாகவும் அறியப்பட்டவர். அவருடைய கருத்தைக் கேட்டுப்பெற வேண்டும் என்று ஊடகத்தினர் விரும்பியது நியாயமா? இல்லை.
இலக்கியம், கலை, பண்பாட்டு விமர்சனம், அரசியல், வரலாறு, இசை என்று பல துறைகளில் செயல்பட்டு வந்தவர் எட்வர்ட் செய்த் (1935-2003). கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்த காலத்தில், ஏராளமான மாணவர்களுக்கு உத்வேகம் அளித்தவர். ஜெருசலேத்தில் பாலஸ்தீனக் கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தவர். எனினும் மத நம்பிக்கை அற்றவர். இஸ்லாமியச் சமூகங்கள்மீது பற்றும் பரிவும் கொண்டவர். மேற்குலகின் அத்துமீறல்களை விமர்சித்து வந்தவர்.
செய்த்தைப் பொறுத்தவரை - குண்டு வீசுவது மட்டுமல்ல, தவறாக முத்திரை குத்துவதும் குற்றம்தான். ‘ஈரான் ஓர் அபாயகரமான நாடு; நமக்கெல்லாம் ஓர் அச்சுறுத்தல் என்று மேற்கத்திய ஊடகங்கள் வெளியிடும் செய்தியில் மறைமுகமான பல செய்திகள் ஒளிந்துகொண்டுள்ளன. ஈரான் ஏன் அபாயகரமான நாடு? ஏனென்றால், அதனிடம் அணு ஆயுதம் இருக்கிறது. சரி, அணு ஆயுதம் வைத்திருக்கும் எல்லா நாடுகளும் ஆபத்தானவையா என்று கேட்டால் இல்லை என்பார்கள். ஈரான் ஒரு மோசமான நாடு என்பதால் அணு ஆயுதத்தை அவர்கள் பயன்படுத்துவதற்கான சாத்தியம் அதிகம் என்பார்கள்.