

நாடு முழுவதும் மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் சளி, இருமல் தொந்தரவுகளுக்கான இருமல் மருந்தை மருந்தகங்களில் விற்கத் தடை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. மக்களின் உடல்நலன் சார்ந்த முன்னெடுப்பை எந்தவித சமரசமும் இல்லாமல் செயல்படுத்துவது அவசியம்.
2025இல் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் கலப்பட இருமல் மருந்துகளால் குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வுகள் நேரிட்டன. இதன் தொடர்ச்சியாக விற்பனைக்குக் கடுமையான விதிமுறைகள் விதிப்பது தொடர்பாக டிசம்பரில் வெளியிடப்பட்ட வரைவு முன்மொழிவு மீது மக்கள் தெரிவித்த கருத்துகளைப் பரிசீலித்த மத்திய சுகாதாரம் - குடும்ப நல அமைச்சகம், மேற்கண்ட நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதன்படி 1945ஆம் ஆண்டு மருந்துகள் விதிகள் 5ஆவது திருத்தத்தின் மூலமாக இந்தத் தடை அமலுக்கு வந்துள்ளது. மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுடன் (DTAB) மத்திய அரசு ஆலோசித்து மருந்துகள் - அழகுசாதனப் பொருள்கள் சட்டம் 1940இன் பிரிவுகள் 12, 33 ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, மத்திய அரசு இறுதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.