காவிரி: ராசிமணலில் அணைத் திட்டம் | சொல்... பொருள்... தெளிவு

இரு மாநிலங்களின் தண்ணீர்த் தேவைக்காக காமராஜர் முன்னெடுத்த திட்டம் இது
காவிரி: ராசிமணலில் அணைத் திட்டம் | சொல்... பொருள்... தெளிவு
Updated on
2 min read

தமிழ்நாட்டின் மேட்டூர் அணையில் இருந்து இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கப்படாத சூழல் நிலவுகிறது. அதேநேரத்தில் கர்நாடகத்தில் மேகேதாட்டு அணை கட்டுவது தொடர்பாகத் தீவிரமாகப் பேசப்பட்டு வருகிறது. அணை கட்டுவதற்கு கர்நாடகத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானமும் நிறை வேற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விவாதத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, ராசிமணலில் அணை கட்டுவது தொடர்பான கோரிக்கையை முன்வைத்தார். என்ன திட்டம் அது?

கர்நாடக அணைகள்

கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே 1932இல் கிருஷ்ணராஜ சாகர், 1974இல் கபினி, 1979இல் ஹேமாவதி, 1982இல் ஹாரங்கி என நான்கு அணைகள் செயல்பாட்டுக்கு வந்தன. இந்த அணைகளில் ஏறக்குறைய 114.57 டிஎம்சி தண்ணீர் தேக்கிவைக்க முடியும்.

காவிரி விவகாரத்துக்குப் பிறகு அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்ற உத்தரவு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு முறையாகத் தண்ணீர் வழங்குவதில் கர்நாடகம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிடிவாதப் போக்கை வெளிப்படுத்துகிறது.

பற்றாக்குறைக் காலங்களில் தண்ணீர்ப் பங்கீடு சிக்கலாகிறது. பருவமழைக் காலத்தில் கர்நாடகத்தில் அதிக மழைப் பொழிவின்போது தமிழகத்தை வடிகாலாக கர்நாடகம் பயன்படுத்திக்கொள்கிறது.

அணையில் தேக்கிவைக்க முடியாத தண்ணீரை அப்படியே திறந்துவிடுகிறது. ஆனால் மேட்டூர் அணை நிரம்பி, உபரி நீர் கடலில் கலப்பதைக் காரணம் காட்டியும், பெங்களூருக்கான தண்ணீர்த் தேவையை வலியுறுத்தியும் மேகேதாட்டு அணைத் திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு மேலாக கர்நாடகம் தீவிரமாக முன்வைத்து வருகிறது.

மேட்டூர் அணை

தமிழகத்தின் மிகப் பெரிய அணையாகக் கருதப்படும் மேட்டூர் அணை, 1934இல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. 214 அடி (65.2 மீட்டர்) உயரம் கொண்ட இந்த அணையில் தேக்கிவைக்கக்கூடிய நீர்மட்டம் 120 அடி. நீர்க் கொள்ளளவு 93.4 டிஎம்சி இந்த அணையைத் தவிர, தமிழகத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டப் புவியியல்ரீதியாகச் சாத்தியப்படவில்லை.

மேட்டூருக்குக் கீழே உள்ள பகுதிகள் சமவெளியாக இருப்பதால் அணை கட்டுவது சாத்தியமில்லை. ஆனால், எதிர்காலத்தில் இரு மாநிலங்களின் தண்ணீர்த் தேவையை உணர்ந்து, ஒகேனக்கல் அருகே ராசிமணலில் அணை கட்டும் திட்டத்தை காமராஜர் முன்னெடுத்தார்.

ராசிமணல் அணை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒகேனக்கல் அருகேதான் ராசிமணல் என்கிற இடம் உள்ளது. தமிழகத்துக்கான காவிரி நீர் அளவிடப்படும் பிலிகுண்டுலுவில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது.

மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீரைத் தேக்கிவைக்கவும் மின்சாரம் தயாரிக்கவும் இந்த இடம் அணை கட்டச் சாத்தியமான பகுதி என்று கருதி, 1961இல் காமராஜர் அடிக்கல் நாட்டினார். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்திலும் அதற்கான முயற்சிகள் தொடர்ந்தன.

ராசிமணல் இரண்டு மாநிலங்களின் எல்லைக்கும் இடைப்பட்டது. இடது கரை தமிழகத்துக்கும் வலது கரை கர்நாடகத்துக்கும் சொந்தமானது. அந்த இடத்தில் இருபுறமும் மலைகள் இருப்பதால், ஏறக்குறைய 100 டிஎம்சி தண்ணீரைச் சேமிக்க முடியும் என்று தமிழ்நாட்டின் சில விவசாய அமைப்புகள், சில அரசியல் கட்சிகள் கருதுகின்றன.

அதேநேரத்தில், ராசிமணலில் அணை கட்டுவது தொடர்பாக மாற்றுக் கருத்துகளும் உண்டு. 10 மீட்டர் அளவுக்கு அணை கட்டினால் ஒரு டிஎம்சி தண்ணீர்கூடச் சேமிக்க முடியாது என்றும் சொல்லப்படுகிறது. இதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்தால், அதற்கு விடை கிடைக்கலாம்.

நீடிக்கும் பிரச்சினை

தமிழ்நாடு - கர்நாடகம் இடையே தொடர்ச்சியாகக் காவிரிப் பிரச்சினை நீடித்துவருகிறது. காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதி, மேல்மடைப் பகுதியாக உள்ள கர்நாடகம், கடைமடைப் பகுதியில் இருக்கும் தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க மறுப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆனாலும் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை.

ஏற்கெனவே காவிரியின் குறுக்கே நான்கு அணைகளைக் கட்டியிருக்கும் கர்நாடகம், மேகேதாட்டு அணையைக் கட்ட தீவிரம் காட்டும்போது, மாற்று ஏற்பாடாக ராசிமணலில் இரண்டு அரசுகளும் அணை கட்டலாம் என்கிற யோசனை முன்வைக்கப்படுகிறது.

2024இல் தமிழக - கர்நாடக விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ‘காவிரிக் குடும்பம்’ என்கிற பெயரில் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி மேகேதாட்டு / ராசிமணலில் அணை கட்டுவது தொடர்பாகக் கலந்துரையாடியதும் நினைவுகூரத்தக்கது.

மேகேதாட்டு அணை கட்டினால், உபரியாக மேட்டூருக்கு வரும் தண்ணீர் தடைபட்டுத் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று விவசாயிகளும் செயல்பாட்டாளர்களும் அஞ்சுவதைப் புறந்தள்ள முடியாது.

வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரைத் தேக்கி வைக்கும் வகையில்தான் மேகேதாட்டு அணை திட்டத்தைச் செயல்படுத்த முனைவதாக கர்நாடகம் சொல்கிறது.

கடலுக்குச் செல்லும் உபரிநீரைத் தேக்கிப் பயன்படுத்துவதுதான் நோக்கம் என்கிற நிலையில், ராசிமணல் அணை குறித்துச் சிந்திப்பதும் தவறில்லை என்கிற வாதம் முன்வைக்கப்படுகிறது.

சட்டப்படி என்ன?

கர்நாடகம் புதிய அணை கட்ட விரும்பினால், கடைமடைப் பகுதியில் உள்ள தமிழ்நாட்டின் அனுமதி தேவை என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருக்கிறது. காவிரி நடுவர் மன்றமும் காவிரி மேலாண்மை ஆணையமும் அரசமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட அமைப்புகள்.

கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகியவற்றுக்கு நதி நீர்ப் பங்கீடு சார்ந்த அளவுகளை நிர்ணயித்த பிறகு உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்தே காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசால் அமைக்கப்பட்டது.

1956ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர்த் தகராறு சட்டத்தின் பிரிவு 6ஏ-இன்கீழ் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட அமைப்புதான் இது.

ஆனால் இதை மத்திய அரசுகூடக் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான் நடைமுறை. அவை வழங்கும் தீர்ப்புகளை மாநில அரசுகள் முறையாக நடைமுறைப்படுத்தியாக வேண்டும். இப்போதும் அது தொடர வேண்டியது அவசியம்!

காவிரி: ராசிமணலில் அணைத் திட்டம் | சொல்... பொருள்... தெளிவு
அன்டே புடிமிரின் அற்புத கோலால் பனாமாவை வீழ்த்தியது குரோஷியா | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in