தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு சேகரிக்கும் பொருட்டு மக்களைச் சந்திக்க ஒரு மாதம்கூட இல்லாத நிலையில், தொகுதிப் பங்கீட்டிலும், தேர்தல் அறிக்கை தயாரிப்பதிலும், வேட்பாளரை நிறுத்துவதிலும் எல்லாக் கட்சிகளும் முனைப்புடன் செயல்படுகின்றன.
இந்தச் சூழலில் ஆளும்கட்சியானாலும் சரி, எதிர்க்கட்சியானாலும் சரி, அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் மக்கள் நலவாழ்வுத் துறை தொடர்பாக இடம்பெற வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஒரு மருத்துவராக நான் யோசிக்கிறேன்.
பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு
பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு (Public Health Infrastructure) என்பது மக்கள் நலனின் அடித்தளம். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் இது சிறப்பாகவே உள்ளது. ஆனாலும், மருத்துவத் தொழில்நுட்ப வசதிகள் நவீனமாகி வருகிற இன்றைய சூழலில், இதை மேலும் வலுப்படுத்தும் திட்டங்கள் தேவை.
குறிப்பாக, ஒவ்வொரு கிராமத்துக்கு அருகிலும் மக்கள்தொகைக்கு ஏற்ப ஆரம்பச் சுகாதார நிலையம் அல்லது துணைச் சுகாதார மையம் அமைப்பது, மலைப்பகுதி, தீவுப்பகுதி போன்ற இடங்களிலும் நகரங்களில் அதிக நெரிசல் உள்ள இடங்களிலும் அரசின் மருத்துவச் சேவை தடையின்றிக் கிடைக்க வழிசெய்வது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
இதனால், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கணிப்பதும் சிகிச்சை அளிப்பதும் தொற்றுநோய்ப் பரவலைத் தடுப்பதும் எளிதாகும். அடுத்தநிலை மருத்துவக் கட்டமைப்பின் பணி குறையும். நிதிச்செலவினம் மிச்சமாகும்.
எல்லாச் சேவைகளும் இலவசம்
அரசின் மாவட்ட/தாலுகா மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரி இணைந்த மருத்துவமனைகளிலும் சிடி ஸ்கேன் போன்ற குறிப்பிட்ட சில பரிசோதனைகளுக்கும் ஆஞ்சியோபிளாஸ்டி / ஸ்டென்ட் சிகிச்சை போன்ற சிகிச்சைகளுக்கும் தனியார் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களுடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
முதல்வர் காப்பீட்டுத் திட்டம் ஓர் எடுத்துக்காட்டு. இதனால் இப்போது பலரும் பயன்பெறுகின்றனர் என்றாலும், மேல்நாடுகளில் உள்ளதுபோல், இது சாமானியர் அனைவருக்கும் பயன்படுவதில்லை; எல்லா சிகிச்சைகளுக்கும் பயன்படுவதில்லை.
