

தமிழ்நாடு அரசு சார்பில், கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், முனைவர் பட்ட ஆராய்ச்சி (பிஎச்.டி.,) மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க அரசுத் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. ஆனால், அதிகாரிகளின் தலையீட்டினால் இந்த முடிவு நிலுவையில் வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. உடனடியாகத் தீர்வு காண வேண்டிய விஷயம் இது.
90களிலேயே மென்பொருள், மின்னணுவியல் துறைகளின் வளர்ச்சியைத் தொலைநோக்குப் பார்வையோடு அணுகியது தமிழ்நாடு. சென்னையில் 2000இல் அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசால் டைடல் பூங்கா அமைக்கப்பட்டது.
அடுத்தகட்டமாகப் பள்ளிப் பருவத்திலிருந்தே ஐடி பாய்ச்சலுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்த பிளஸ்2 பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் 2011இல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நடைமுறைக்கு வந்தது. கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட இந்தத் திட்டம் பின்னர் தொடங்கப்படாமல் இருந்தது.