

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மத்திய - மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு அறிக்கையின் முதல் பகுதி கடந்த பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டு, மாநில சுயாட்சிக்கான தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.
இந்த அறிக்கையில், ‘அதிகாரப் பரவலாக்கத்துக்கும் மாநில சுயாட்சிக்குமான வாதம்’ என்கிற தலைப்பில் துணை அமைப்புக் கொள்கை அல்லது அதிகாரப் பரவலாக்கல் கொள்கை (Principle of Subsidiarity) பற்றி விரிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
‘துணை அமைப்புக் கொள்கை’ என்பது உண்மையான கூட்டாட்சி நாட்டுக்கான மக்களாட்சியின் மையக் கரு. இது எளிமையான, ஆனால் கண்டிப்பான ஒரு முன்மொழிவின் மீது அமைந்துள்ளது; அரசாங்கப் பணிகளைச் செயல்திறனுடன் நிறைவேற்றக்கூடிய, மிகவும் அடிப்படை நிலையில் உள்ள அமைப்பே செய்ய வேண்டும்; தவிர்க்க முடியாதபோது மட்டுமே, மேல்நோக்கி மாற்றப்பட வேண்டும்’ என்கிறது இந்த அறிக்கை.
அடிப்படை நிலை அமைப்பு செய்யவேண்டிய பணியை, எந்தச் சூழ்நிலையிலும் மேல் நிலையில் உள்ள அமைப்பு செய்யக் கூடாது என்பது ஒட்டுமொத்த அதிகாரப்பகிர்வுக் கோரிக்கையின் மிக முக்கியப் புள்ளியாகும்.
ஆனால், இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே சட்டமன்றத்தில்தான் ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்குப் பதிலாகத் தனி அலுவலர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர்களை நியமித்து, அவர்கள் மூலம் ஊராட்சிகளை நிர்வாகம் செய்யும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. என்ன ஒரு முரண்? உள்ளாட்சிகளை உள்ளடக்காத கூட்டாட்சி எப்படிக் கூட்டாட்சியாக இருக்க முடியும்?
நிலவரம் என்ன?
தமிழ்நாட்டில் உள்ளாட்சிகளுக்கு மாநில நிதிக் குழு மானியம் மிகக் குறைந்த அளவாக 10% மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. 1996இல் 8% ஆக இருந்த இந்நிதி, தற்போது 10% ஆக மட்டுமே மாறியிருக்கிறது.
அனைத்து ஊராட்சிகளுக்கும் சேர்த்து ஒரே வங்கிக் கணக்காக சென்னையில் வைத்திருப்பதன் மூலம் மொத்தமான நிதி நிர்வாகத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கான வழிமுறைகளைக் கையாண்டு வருகிறது தமிழ்நாடு அரசு.
ஊராட்சிகளுக்கு வர வேண்டிய தொகுக்கப்பட்ட நிதிகள் சிலவற்றை ஊராட்சிகளின் ஒப்புதல் இன்றி வேறு ஊரகத் திட்டங்களுக்கு மடைமாற்றம் செய்வதற்கான முடிவுகள் சென்னையிலேயே எடுக்கப்படுகின்றன.