

தேசியக் கல்வி ஆராய்ச்சி - பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) வெளியிட்ட 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், நீதித் துறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளுடன் இடம்பெற்ற பாடத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது விவாதத்துக்கு உரியதாகியிருக்கிறது.
பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான கொள்கைகளிலும் திட்டங்களிலும் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்க இந்திய அரசால் 1961இல் நிறுவப்பட்ட தன்னாட்சி அமைப்பு என்சிஇஆர்டி.
இந்தியா முழுவதும் உள்ள 25,000க்கும் அதிகமான சிபிஎஸ்இ பள்ளிகளில் என்சிஇஆர்டி பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. இதன் பாடத்திட்டத்தைச் சீரமைக்கும் பணி அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். இதில் மனப்பாடம் செய்வதைத் தவிர்த்து, செயல்வழிக் கற்றலை ஊக்கப்படுத்தும் நோக்கில் தேசியக் கல்விக் கொள்கை 2020இன் கீழ் புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது 8ஆம் வகுப்புக்கான புதிய பாடப்புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இவற்றுள் சமூக அறிவியல் புத்தகத்தில், ‘நமது சமூகத்தில் நீதித் துறையின் பங்கு’ என்னும் அத்தியாயம் இடம்பெற்றுள்ளது. அதில் நீதித் துறையின் கட்டமைப்பு, நீதிமன்றங்களின் செயல்பாடுகளைப் பற்றி மட்டும் பேசாமல், சர்ச்சைக்குரிய கருத்துகளும் கூறப்பட்டிருந்தன.