

தமிழ்க் கலை இலக்கியத்தில் புதுமொழியையும் தளத்தையும் கண்டடைந்தவர் என்.டி.ராஜ்குமார். அவரின் கவிதைகளையும் கலைச் செயல்பாடுகளையும் ஒரு காலத்தின் துணுக்காகக் கொள்ளாமல் கலை, இலக்கிய வரலாற்றின் நீண்ட தொடர்ச்சிக்குள் வைத்து வாசிக்க வேண்டியுள்ளது.
பெரும்பாலும் ஏற்பு அழகியலைப் பேசி லெளகீக மனவெளியின் பரப்பை விரித்த கவிதை, கலை வார்ப்புகளுக்கு மத்தியில் மாற்று அழகியலின் விகசிப்போடு பத்துக் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு இருக்கிறார். ஒவ்வொரு தொகுப்பிலும் கலைச் செயல்பாட்டிலும் அவரது படைப்பு மனம் சித்தர் சிந்தனை, நவீனத்துவ உடைப்பு, தலித் அரசியல், வாய்மொழி மரபு, மீவியல் காட்சியமைப்பு, நுகர்வுக் காலச்சார விடுதலை ஆகியவற்றின் ஒன்றிணைப்பை நிகழ்த்தியிருக்கிறது.
சித்தர் சிந்தனை: காலவெளியில் இன்றளவும் தனித்துத் துலங்கும் சித்தர் பாடல்கள் எளிய மக்களின் குரலாக ஒலித்தவை. பிரமாண்டமான தத்துவார்த்த கருத்தியலுக்குச் சுலபமாக மறுமொழி கொடுத்தவை. இந்த அம்சங்களைத் தனது படைப்புகளில் பெருவாரியாகக் கொண்டிருக்கிறார் என்.டி.ராஜ்குமார். ‘நெஞ்சினிலே தீண்டியதோர் கரும்பாம்பே’, ‘சூசகமாய் உள்நுழைந்தென்னை ஆட்டிடும் பாம்பே’, ‘மிரட்டாட்டம் போட்டாடி நெளியும் பாம்பே/ குற்றம் ஒன்றும் இல்லையென்று விளையாடு பாம்பே’ என்று என்.டி.ராஜ்குமார் பாம்போடு நிகழ்த்துகிற உரையாடல் பாம்பாட்டிச் சித்தரை நினைவுக்கு கொண்டுவருகிறது.