

தமிழகத்தின் இயற்கை வளம் நிறைந்த பகுதியாக மேற்குத் தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளன. தமிழகத்தின் மின்தேவைக்கு மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அணைகள் கட்டி மின்உற்பத்தி செய்ய முடியும் என 1950களில் தொழில்நுட்ப அறிஞர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, 10,000க்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்கள் என்கிற பெரும்படையுடன் அணைகள் கட்டும் பணிகள் தொடங்கின. இந்தத் திட்டங்கள் பெரும்பாலும் கனடா நாட்டின் தொழில்நுட்பம், நிதி உதவி ஆகியவற்றின் மூலமாகச் செயல்படுத்தப்பட்டன.
முக்கிய மின் திட்டங்கள்
குந்தா மின்நிலையம் என்பது, ஒரு மின்நிலையத்துக்குப் பதிலாக ஆறு தனித்தனி மின்நிலையங்களாக உள்ள ஒரு தொடர் வலை அமைப்பு. இது அவலாஞ்சி, எமரால்டு, அப்பர் பவானி, போர்க்கி முண்ட்டு போன்ற முக்கிய நீர்த்தேக்கங்கள் மூலம், நீலகிரி மலைகளின் செங்குத்தான சரிவுகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது.
1964க்குப் பிறகு மேலும் ஆறு இடங்களில் நீர் மின்உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குந்தா நீர் மின்உற்பத்தி வலைப்பின்னலின் மொத்த மின்உற்பத்தி 850 மெகாவாட். கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆனைமலை பகுதியில் அமைந்துள்ள காடம்பாறை நீர் மின்உற்பத்தித் திட்டம், இந்தியாவின் தூய்மையான எரிசக்தி ஒரு பொறியியல் அற்புதம் என்று அனைவராலும் பாராட்டப்பட்டது.
1987இல் பெல் (BHEL) நிறுவனம் வழங்கிய டர்பைன்களுடன் செயல்பாட்டுக்கு வந்த இத்திட்டம், தமிழ்நாட்டின் முதலாவது நீரேற்று மின்உற்பத்தி நிலையம். கண்ணுக்குப் புலப்படாத நிலத்தடிக் கட்டுமானத்துக்காகப் புகழ்பெற்றது.
இயந்திரங்களை வைப்பதற்காகப் பொறியாளர்கள் திடமான பாறைக்குள் 6 கி.மீ. நீளத்துக்குச் சுரங்கப்பாதை அமைத்துள்ளனர். இங்கு 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.