

இந்திய அளவில் கல்லூரிச் சேர்க்கை விகிதம் 29.5ஆக இருக்கும்போது, தமிழகத்தில் அது 52.3%ஆக இருப்பது அடிக்கடி பெருமிதமாகக் குறிப்பிடப்படுகிறது. அதற்கு அடித்தளமிட்டது எது? இது நேற்று தொடங்கி, இன்று தொட்ட இலக்கு அல்ல.
தமிழகம் மட்டுமன்றி, இந்தியாவின் பிற மாநிலங்களில் சிலவற்றின் கல்வி வளர்ச்சியை எடுத்துக்கொண்டாலும், வளர்ந்த நாடுகளின் கல்வி வளர்ச்சியை எடுத்துக்கொண்டாலும் அதற்கான முன்னேற்பாடுகள் பெரும்பாலும் வெகு காலத்துக்கு முன்பு முன்னெடுக்கப்பட்டவை என்பது விளங்கும்.
சான்றாக, கேரளத்தின் கல்வி வளர்ச்சி தமிழகத்தைவிட அதிகமாக இருப்பதற்கான பல காரணங்களில், 1817இலேயே திருவனந்தபுரம் ராணி பிறப்பித்த கட்டளைக்கு முக்கியப் பங்கு உண்டு.
அந்தக் கட்டளையின் மூலம் தொடக்கக் கல்வி அரசின் பொறுப்பாக ஆனது. அனைவருக்கும் கல்வி அளிக்கப்பட்டது. அத்தகைய ஒரு செயல் தமிழ்நாட்டில் நிகழ்ந்தது நீதிக்கட்சி ஆட்சியில்.
பெற்றோருக்குத் தண்டனை
1921ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பானது, சென்னை நகரின் ‘ஏறக்குறைய 50% ஆண்களும் 80% பெண்களும்’ அடிப்படை எழுத்தறிவு நிலையைக்கூட எட்டவில்லை என்பதை வெளிப்படுத்தியது.
சென்னையே இப்படி என்றால், மற்ற பகுதிகளில் மிகவும் குறைவான கல்வியறிவே இருந்திருக்கும். இந்த நிலையை மாற்ற எடுக்கப்பட்ட முன்னெடுப்புகளில் ஒன்று ‘மதராஸ் தொடக்கக் கல்விச் சட்டம் - 1920’. இது நீதிக்கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு நடைமுறைக்கு வந்தது.