

பிரிட்டிஷ் இந்திய அரசின் ஆண்டறிக்கைகளின்படி, சென்னை மாகாணத்தில் 1927இல் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 967. இதில் பாலுறவால் 237 பேரும், குடும்பச் சிக்கலால் 211 பேரும் கொல்லப்பட்டதாக அந்தத் தரவு தெரிவிக்கிறது. 2022இல் தமிழ்நாட்டில் கொல்லப்பட்ட மொத்தம் 1,690 பேரில், சட்டவிரோதப் பாலுறவால் 126, காதல் விவகாரத்தால் 77, குடும்பச் சிக்கலால் 443, வரதட்சிணையால் 29, சிசுக்கொலை 7 என 682 பேர் கொல்லப்பட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தரவுகள், குடும்பங்களில் நிலவும் பிரச்சினைகளை உணர்த்துகின்றன. கொலைக்கான காரணங்களில் அரசியல், வர்க்க, மதச் சிக்கல்களைவிடக் குடும்பத்தின் உள்முரண்களே முன்னணியில் இருக்கின்றன. அவமதித்தல், அடித்தல், புறக்கணித்தல் போன்றவற்றையும் கணக்கிட்டால், குடும்ப உள்பகை பூதாகரமாக இருக்கும். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நீடிக்கின்ற இச்சிக்கல்களைப் பற்றி விவாதிப்பது அவசியம்.
தாரமும் காதலும்: மந்தைகளாக அலைந்து திரிந்த மனிதர்களை மனைவி, கணவன், வாரிசுகள் எனக் குடும்பமாக்கியது உற்பத்தியும் சொத்துடைமையும்தான். இதுதான் மனைவிகளைக் கணவர்கள் ஒடுக்குகிற முதல் வர்க்க ஒடுக்குமுறை நிறுவனம் என ஏங்கல்ஸ் கூறுவது இந்தியக் குடும்பங்களுக்கும் பொருந்தும். உலக நாடுகளைப் போல் இந்தியக் குடும்பங்களில் சொத்துடைமைச் சமூகங்களில் பலதார மணம், பொது மனைவியர் முறைகளில் பாலுறவு ஆண்களின் ஏகபோகமாக இருந்தது.
பாட்டாளிகளிடம் ஒருதார மணமுறையும், காதலித்துக் கரம்பற்றுவதும், கசந்தால் பிரிந்து மறுமணம் செய்யும் சுதந்திரமும் மனைவிக்கும் கணவனுக்கும் இருந்தன.
ஒருதார மணத்தைப் பெண்கள் உருவாக்கினாலும், முதலாளித்துவ அரசாங்கம் நலத் திட்டங்கள், ஓய்வூதியம் போன்றவற்றைக் கொடுக்கக் குடும்பத்தைக் கணக்கில் கொள்வதால் ஒருதார மணம் சட்டமாகவும், அரசியல் பொருளாதார நிறுவனமாகவும் இறுகியது.
வெவ்வேறு மணமுறைகள் பிரிட்டிஷ் – இந்தியாவில் ஒருதார மணக் குடும்பமாக உருமாறத் தொடங்கின. ஒருதாரமும் காதலும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்தவை என்பதால், காதலிக்கும் சுதந்திரம் வேண்டும் என்கிற விவாதத்தைச் சொத்துடைமைச் சாதிப் பெண்கள் முன்னெடுத்தனர்.
சாதிச் சங்க மாநாடுகளில் காதலை ஆதரித்து ஆண்களும் தீர்மானங்களை நிறைவேற்றினர். கற்ற பெண்களுக்கு இணையான இணைக்காகவும், உள்சாதிகளை, சாதிகளை ஒழிக்கவும் காதல் கதைகளும் கவிதைகளும் கட்டுரைகளும் காலனிய காலத்தில் ஏராளமாக வெளியாகின.
இணக்கமும் பிணக்கமும்: காதலித்துக் கரம்பற்றுவது இயக்கமாகத் தோன்றிய சொத்துடைமைச் சாதிகளிலும், துணையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் பெற்றிருந்த பாட்டாளிகளிடமும் ஏற்பாட்டுத் திருமணங்கள்தான் இக்காலத்தில் பெரும்பாலும் நிகழ்கின்றன. பணக்கார, நடுத்தர வர்க்கங்கள் நற்குணங்களாகிய அக அழகைப் புறக்கணித்து, பொருளையும் புற அழகையும் நிபந்தனையாக்கித் திருமணங்களை நடத்துகின்றன.