

‘1880களில் புதிய இயந்திரங்கள், திறமையான தொழிலாளர்களின் வேலைகளைக்கூடக் காலி செய்தன. சிகாகோவில் உபரித் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது.
நீங்கள் சம்பள வெட்டை அல்லது அதிக வேலை நேரத்தை ஒப்புக்கொள்ள மறுத்தால், உங்கள் வேலையைப் பார்க்க எப்போதும் யாரோ ஒருவர் தயாராக இருப்பார்’ - அமெரிக்க அறிஞர் வில்லியம் அடல்மன் தனது ‘மே தின தியாகிகள் வரலாறு’ புத்தகத்தில் கூறியிருக்கும் வார்த்தைகள் இவை.
அந்தக் காலக்கட்டத்தில் ஒரு தொழிலாளியின் சம்பளத்தில் பெரும்பகுதி உணவுக்கே செலவாகிவிடுவதாக அப்போதைய புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
இந்தச் சூழலில்தான் ஆல்பர்ட் பார்சன், அகஸ்ட் ஸ்பைஸ், சாமுவேல், ஜார்ஜ் எங்கெல், ஆல்பர்ட் ஃபிஷர் போன்றோர் தொழிலாளர்களைத் தொடர்ந்து போராட்டக் களத்துக்கு அழைத்து வந்தனர்.
1880களில் போராட்டம் தீவிரமடைந்ததற்கு வேலையின்மையும் போதிய வருமானம் இல்லாததும் முக்கியக் காரணங்கள். எனவே, வேலை நேரத்தைக் குறைத்தால் இந்தப் பிரச்சினை மட்டுப்படும் என்கிற மாற்று ஆலோசனையுடன் தங்கள் உரையை ஆல்பர்ட் பார்சன், அகஸ்ட் ஸ்பைஸ் ஆகியோர் தீர்மானித்தனர்.
மே தினமும் ஹேமார்க்கெட்டும்
1886 மே 1 முதல் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் திரண்டு ‘எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் ஓய்வு, எட்டு மணி நேரம் சமூகப் பணி’ என்கிற முழக்கத்தை முன்வைத்துப் போராடினர். மே 4இல் ஹேமார்க்கெட்டில் (Haymarket) போராட்டம் நடந்தது.
ஆயிரத்துக்கும் அதிகமானோர் கூட முடியும்; பல வாயில்கள் இருப்பதால் அசம்பாவிதம் நடந்தால் அனைவரும் வெளியேற முடியும் என்பது போன்ற காரணங்களால் அந்த இடம் தேர்வுசெய்யப்பட்டது.