

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) சில பணிகளில் தனியார் பங்களிப்பு அனுமதிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ தனியார்மயமாக்கப்படாது என அதன் தலைமையும் மத்திய அரசும் விளக்கம் அளித்திருக்கும் நிலையில், இது தொடர்பான விவாதங்கள் தொடர்கின்றன. அரசின் முடிவு இந்திய விண்வெளித் துறைக்குத் துணைநிற்கும் என்கிற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.
இஸ்ரோ, இந்தியாவின் பெருமைமிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாகும். செயற்கைக்கோள்கள், விண்வெளித் தொழில்நுட்பங்கள், நாட்டின் பாதுகாப்பு, ராணுவத் தகவல் தொடர்பு, எல்லை கண்காணிப்பு முதலான ரகசிய அறிவியல், தொழில்நுட்ப நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நிறுவனம் இது. அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவந்த இஸ்ரோவில் தற்போது தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இதனால், இஸ்ரோவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர் சங்கங்கள், விண்வெளித் திட்டம் எந்தத் திசையை நோக்கிச் செல்கிறது என்பதை எழுத்துபூர்வமாகத் தெளிவுபடுத்துமாறு இஸ்ரோவின் தலைமையிடம் கோரியுள்ளன. இதற்கு, இஸ்ரோ தனியார்மயமாக்கப்படாது என்றும், மேம்பட்ட விண்வெளி ஆராய்ச்சி, தேசிய செயல் உத்தித் திட்டங்கள், விண்வெளி அறிவியல் - ஆய்வு, முக்கியமாக எல்லைக்கு உள்பட்ட திறன்கள் ஆகியவற்றுக்கான முதன்மை நிறுவனமாக இஸ்ரோ தொடரும் என்றும் அதன் தலைமையும், மத்திய அரசும் பதில் அளித்துள்ளன.