

விடுதலை இந்தியா தமக்கென ஓர் அரசியல் நிர்ணய அவையை உருவாக்கித் தனி அரசமைப்பைத் தேர்வுசெய்யும் முன்பே ஒரு பிரச்சினை உருவெடுத்தது. இன்றும் கரும் நிழலாகத் தொடரும் அது - மொழிப் பிரச்சினை.
கேரள அரசு அனைத்துப் பள்ளிகளிலும் மலையாளத்தை முதல் மொழியாக ஆக்கியிருப்பது சமீபத்திய எடுத்துக்காட்டு. இது சில எதிர்ப்புகளைச் சந்திக்கிறது.
திரிபுராவில் கோக்போரோக் (பழங்குடியினரின் மொழி) உள்ளிட்ட 19 மொழிகள் தேவநாகரி எழுத்துருவை ஏற்கவைக்கச் செய்யப்படும் முயற்சிகள் கடும் எதிர்ப்பைச் சந்திக்கின்றன.
எதிர்ப்பின் வரலாறு
1937களில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்தது. இப்போதைய ஆந்திரம், கேரளம், கர்நாடக மாநிலங்களின் பகுதிகளும் சென்னை மாகாணத்தில் அமைந்திருந்தன. ராஜாஜி முதல் அமைச்சராக இருந்தார். பள்ளி மாணவர்கள் கட்டாயம் இந்தி பயில உத்தரவிடப்பட்டது. இந்தி திணிப்பை எதிர்த்துக் கிளர்ச்சிகள் தொடங்கின.
நடராஜன், தாளமுத்து உள்ளிட்டோர் உயிர் ஈந்தனர். இதற்கிடையில், இரண்டாம் உலகப் போர் மூண்டது. இத்தருணத்தில், 1939களில் சென்னை மாகாண ஆளுநராக இருந்த ஜான் அர்ஸ்கின் (John Erskine) அந்த உத்தரவைத் திரும்பப் பெற்றார் 26.01.1950இல் இந்தியா குடியரசு ஆன பிறகு இந்தி அலுவல் மொழியாகவும், ஆங்கிலம் இணை அலுவல் மொழியாகவும் அறிவிக்கப்பட்டன.
15 ஆண்டுகளுக்குப் பின் ஆங்கிலம் அகற்றப்பட்டு முழுமையாக இந்தி ஆட்சி மொழியாகும் என்கிற நெருக்கடி நிலவியது.
1965 முதல் கல்வி நிலையங்கள் உள்ளிட்டவற்றில் இந்தி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என ஆணை வரப்போகிறது என்கிற சூழல் உருவானது. வங்கத்திலும், தென் மாநிலங்களிலும் இதற்கு எதிர்ப்பு மூண்டது. தமிழகம் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் முதன்மைப் பங்கு வகித்தது.
மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வீதிகளில் இறங்கினர். சின்னச்சாமி, சிவலிங்கம் தியாகிகள் ஆயினர். இந்தி சினிமா ஓடும் திரையரங்குகள்கூடக் கொளுத்தப்பட்டன.
1965 பிப்ரவரியில் 7 துப்பாக்கிச்சூடுகள் நடந்து 24 பேர் உயிர் நீத்தனர். ‘தமிழகத்தில் எம் மக்கள் சுட்டுத் தள்ளப்பட்டனர். பொருள்கள் சேதமாக்கப்பட்டன. உடைமைகள் அழிக்கப்பட்டன.