

கவிதைக்காக காலம் திறந்துவைத்த திருவாசல் கண்ணதாசன். அவரது மூச்சே தமிழாக இருந்ததால், அவரைச் சுற்றியிருந்த காற்றுகூட அவர் எழுதாத பாட்டாக ஒலித்தது. கையில் பேனா பிடிக்காமல் பாட்டெழுதிய கவிஞன், நம் எல்லாருக்கும் பிடித்த கவிஞனான ரகசியமும் அதுதான். அலங்கார அங்கவஸ்திரங்களாக இருந்த திரைப்பாடல்களை மக்களின் அன்றாட ஆடைகளாகவும் துயர இரவுகளின் போர்வைகளாகவும் மாற்றியது அவரது மணித்தமிழ்.
கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக, அரசனாக, சீடனாக, சற்குருவாக, குழந்தையாக, காதலனாக, காதலியாக, ஆண்டானாக, குலதெய்வமாக உள்ளுக்குள் உணர்ந்து மகிழ்ந்தவன் பாரதி. அப்படி அத்தனை அவதாரங்களாகவும் தமிழறிந்த மக்களெல்லாம் கொண்டாடி மகிழ்கிற திருவிழாக் கவிஞன் கண்ணதாசன்.
ஒரு முறை, “விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என்று ஏதாவது உண்டா” என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டபொழுது, “உண்டு. அவை பிறப்பும் இறப்பும்” என்றார் கண்ணதாசன்.