

ஒவ்வோர் ஆண்டும் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகப் பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கை, ஓர் அதிர்ச்சிகரமான, கவலைக்குரிய கருத்தை முன்வைத்துள்ளது.
2005ஆம் ஆண்டு முதல், சாமானிய மக்களுக்கான ஆயுதமாகவும் உரிமையாகவும், குறிப்பாக மிகப் பெரிய சுதந்திரமாகவும் கருதப்படும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் (RTI Act) குறித்து, அந்த அறிக்கை சில பரிந்துரைகளைத் தெரிவித்துள்ளது.
யாருக்குப் பாதிப்பு? - அதில், ‘தகவல் பெறும் உரிமைச் சட்டம் வெறும் ஆர்வத்துக்காகத் தகவல் கேட்கும் சட்டம் அல்ல’ என்றும், ‘இவ்வாறு கேள்விகள் எழுப்பப்படுவதால் அலுவலர்கள் துணிச்சலான முடிவுகளை எடுக்கத் தயங்குகிறார்கள்; திறந்த மனதுடன் விவாதிக்கத் தயங்குகிறார்கள், இதன் காரணமாக நிர்வாகத் திறன் / ஆட்சித் திறன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உலக அளவில் இந்தியாவில்தான் மிகவும் விரிவான தகவல் பெறும் உரிமைச் சட்டம் இருப்பதால், அது நிர்வாக முடிவெடுத்தல்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்கிற நோக்கிலும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கை – அத்தியாயம் 16இல், பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: ‘பொது நலனுக்குக் குறிப்பிடத்தக்க பயன் அளிக்காத சாதாரணக் கோரிக்கைகளில் இருந்து, பணியாளர் சேவைப் பதிவுகள், இடமாற்றங்கள், ரகசியப் பணியாளர் அறிக்கைகள் ஆகியவற்றை வழங்குவதைத் தவிர்க்கலாம் என்பதும் ஒரு முடிவாக இருக்கலாம்’.