யாருக்கு இல்லை நாகரிகம்!

யாருக்கு இல்லை நாகரிகம்!
Updated on
3 min read

அவர்களுக்கு உயர்வு நவிற்சியில் உரைக்கத் தெரியாது. ஒருமையில்தான் பேசத் தெரியும். உள்ளத்தில் இருப்பதைத்தான் அவர்களால் கூற முடியும். சொல்பவற்றை ஒப்பனை வார்த்தைகளால் அலங்கரிக்கத் தெரியாது.

அவர்​களுக்கு ஆடம்பர ஆடைகள் அணியத் தெரியாது. விலையுயர்ந்த துணிகள் அவர்கள் கையிருப்பில் கிடையாது. ஆனால், இருப்பதை எளிமையாக உடுக்கத் தெரியும். அவர்களுக்கு வளைந்து நெளிந்து வணங்கத் தெரியாது.

மனத்தில் மட்டுமே மரியாதை இருக்​கும். அவர்களுக்கு அடிபணியத் தெரியாது. ஆனால், கீழ்ப்​படியத் தெரியும். கூழைக் குடித்​தாலும் குதூகலிப்​பார்களே தவிர, கூழைக் கும்பிடு போட அறவே தெரியாது.

அவர்களின் ஐந்து விரல்​களும் சோற்றைப் பிசைந்து வாய்க்குக் கொண்டு​செல்லுமே தவிர, இரண்டே விரல்​களில் நாகரி​க​மாகச் சாப்பிடத் தெரியாது. அவர்கள் பசித்தால் மட்டுமே உண்பவர்கள். எப்போ​தாவதுதான் ருசியான உணவு அவர்கள் நாக்குக்குக் கிடைப்​பதால் நாசூக்குப் பார்ப்​ப​தில்லை.

எது நாகரிகம்? - நம்முடைய பார்வையில் அவர்களுக்கு நாகரிகம் தெரியாது. நாம் அவர்களை வரவேற்​பறைக்கு வெளியிலேயே வைத்திருக்க விரும்​பு​கிறவர்கள். அவர்கள் முகத்தைக்கூட உற்றுப் பார்த்து உரையாடு​பவர்கள் குறைவு. அவர்களின் இல்லம் அழகாக இருக்​காது. நம் ஓர் அறையே அவர்களுடைய வீடாக - உண்பதற்​கும், சமைப்​ப​தற்​கும், உடுப்​ப​தற்​கும், படுப்​ப​தற்​கும், படிப்​ப​தற்​கும், பழகுவதற்​குமான இடமாக இருப்​பதுண்டு.

மாட்டுக் கொட்டிலைப் போலவே காட்சி​யளிக்கும் அந்தச் சின்ன வீட்டில் அவர்கள் படுகிற சிரமங்​களையும் தாண்டி, நாம் துயிலெழு​வதற்கு முன்பே - அதிகாலையில் பணிகளைத் தொடங்கி விடுவார்கள். இல்லம் சிறிதாக இருந்​தாலும் உள்ளம் பரந்திருக்கும் பண்புடைய​வர்கள் அவர்கள்.

பட்டினி கிடந்​தாலும் அவர்களுக்கு வைராக்​கியம் அதிகம். ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடம்கொடுத்து​விடக் கூடாது என்று நடந்து​கொள்​பவர்கள் அவர்கள். வறுமை​யிலும் புன்னகைக்கத் தெரிந்​தவர்கள் அவர்கள். துக்கத்​திலும் துளிர்த்​தெழக் கற்றவர்கள். வருத்​தத்தை அடைகாத்​துக்​கொண்டு சோகத்தில் மூழ்கிப்போக அவர்களுக்கு அவகாசமும் இல்லை, வசதியும் இல்லை.

புதிய இடத்துக்கு நாம் வழி கேட்டால் பொறுமையாக அவர்களே பதில் சொல்பவர்கள். நவநாகரிக மனிதர்கள் உதட்டைப் பிதுக்கி​யும், கையை விரித்தும் தெரியாது என்று விடையளிக்​கும்​போது, இவர்கள் சமயத்தில் நம்மோடு வந்து தேடும் முகவரியைக் கைகாட்டிச் செல்பவர்கள்.

எங்கு நல்ல உணவு கிடைக்கும் என்று விசாரித்​தால், சுட்டு​விரலைக் காட்டிச் சொல்லிச் செல்பவர்​களும் இவர்களே.

மரணம் நிகழ்ந்த வீடுகளில், உறவினர்களே சடங்காகப் பார்த்து​விட்டுச் செல்கின்​ற​போது, பூதஉடலை எடுக்​கும்வரை உடன் இருப்​பவர்கள் அவர்கள். முன்பின் தெரியாதவர்கள் இழப்புக்கும் குரலெடுத்து அழுபவர்கள் அவர்கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in