இன்றைய குழந்தைகளை எப்படிக் கையாள வேண்டும்?

ஆசிரியர்களின் பங்கேற்பு மிக அதிகமாகத் தேவைப்படும் காலம் இதுதான்
இன்றைய குழந்தைகளை எப்படிக் கையாள வேண்டும்?
Updated on
3 min read

ஒரு மருத்துவக் கல்வி ஆசிரியராக, மாணவர்களின் கற்றல் முறைகளில் சில முக்கியமான மாற்றங்களை அண்மைக்காலத்தில் பார்க்கிறேன். இன்றைய மாணவர்கள், வகுப்பில் நடத்தப்படும் மரபான விரிவுரைகளில் ஆர்வமின்றி இருக்கிறார்கள்; பாடப்புத்தகங்களைப் படிப்பதைவிடச் சிறு சிறு குறிப்புகளைப் படிப்பதை விரும்புகிறார்கள், வலையொலி (பாட்காஸ்ட்), காணொளித் தொகுப்புகள் வழியான வகுப்புகளை ஈடுபாட்டோடு கவனிக்கிறார்கள். ஆனால், ஆசிரியர்கள் எடுக்கும் வகுப்புகளில் கவனமின்றி அமர்ந்திருக்கிறார்கள். ஏன்?

கவனம் இல்லையா?

இன்றைய குழந்தைகள் கற்றுக்​கொள்ள விரும்ப​வில்லையா அல்லது ஆசிரியர்​களிடம் வகுப்பில் கற்றுக்​கொள்ள விரும்​புவ​தில்​லையா?

உலகம் எவ்வளவோ மாறிவிட்டது. தகவல்கள் கொட்டிக்​கிடக்​கின்றன, கற்றலின் வடிவங்கள் மாறிவிட்டன. ஆனால், நமது வகுப்பறை மட்டும் இன்னமும் மாறாமல் அப்படியே இருக்​கிறது.

ஆசிரியர்​களைக் கேட்டால் இன்றைய மாணவர்​களுக்குக் கவனமோ, பொறுமையோ, ஆர்வமோ இல்லை எனக் குறைகளாக அடுக்கு​வார்கள். ஆனால், அதே மாணவர் ஒரு கிரிக்கெட் போட்டியை மூன்று மணி நேரம் பார்க்​கிறார்; ஓர் இணையத் தொடரை ஒரே நாளில் பார்த்​து​முடித்து​விடு​கிறார்.

அப்படி​யானால் பிரச்சினை கவனத்​திறன் இல்லாதது மட்டுமா அல்லது கவனத்தை ஈர்க்கும் முயற்சிகள் இல்லாததா? பல நூற்றாண்​டு​களாகக் கல்வி முறை மரபான ஒன்றாகவே இருந்து​வந்தது. அறிவு என்பது அரிதானது, ஆசிரியரிடம் இருந்து கற்றுக்​கொள்​ளக்​கூடியது. புத்தகங்​கள்தான் அறிவின் அடிப்படை. அதைக் குழந்தை​களின் மனதில் பதியவைக்க வேண்டும் - இதுதான் கல்வி என்று நாம் அறிந்​திருந்​தோம்.

மாறிப்போன மரபு

ஆனால், செயற்கை நுண்ணறிவு வந்த பிறகு இந்த மரபுகள் தலைகீழாக மாறிவிட்டன. இன்று, அறிவு என்பது ஜனநாயகப்​படுத்​தப்​பட்டு​விட்டது. ஆசிரியர்​களைவிட செயற்கை நுண்ணறிவுத் தொழில்​நுட்பம் அதிகமாகக் கற்றுக்​கொடுக்​கிறது.

புத்தகங்​களைத் தாண்டி நாம் கற்றுக்​கொள்ள ஏராளமாக இருக்​கின்றன. மனப்பாடம் செய்ய​வேண்டிய தேவை இப்போது இல்லை. ஆனால் நம்முடைய வகுப்​பறைகள் இன்னும் பழைய வழிமுறை​களையே கொண்டிருக்​கின்றன.

சிறு காணொளிகள், அசைபடங்கள் (அனிமேஷன்), இணைய வகுப்புகள், வலையொலி என இந்த நவீன உலகத்தில் வாழும் குழந்தையை நூறு ஆண்டு​களுக்கு முன் உருவாக்​கப்பட்ட வகுப்பறை அமைப்​புக்குள் உட்கார​வைத்து, ஒரு மணி நேரம் அமைதி​யாகக் கேட்கச் சொல்வது எந்த அளவுக்குச் சாத்தியம்?

இன்றைய குழந்தைகள்

நமது கல்வி அமைப்பு இன்னும் தொழிற்​புரட்சி காலத்திய தர்க்​கத்தின் அடிப்​படையில் இருக்​கிறது. ஒரே வயது, ஒரே பாடம், ஒரே தேர்வு, ஒரே மதிப்​பீடு, ஒரே வெற்றி வரையறை. ஆனால், இன்றைய குழந்தைகள் அப்படி இல்லை.

அவர்கள் பல்வேறு கற்றல் பாணிகளைக் கொண்டிருக்​கிறார்கள், பல்வேறு ஆர்வங்​களைக் கொண்டிருக்​கிறார்கள், பல்வேறு திறன்​களைக் கொண்டிருக்​கிறார்கள். அவர்களுடைய இந்த மாறுபட்ட தேவைகளைப் பற்றிச் சிந்திக்கும் கல்வி அமைப்புதான் இன்றைய காலத்தில் அவசியம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in