

பிரபலமான பொறியியல் கல்லூரியின் தாளாளரை அண்மையில் சந்தித்து உரையாடியபோது, “இந்த ஆண்டு இதுவரை கணினித் துறைக்கு விண்ணப்பங்கள் பெரிதாக வரவில்லை. மற்ற துறைகளில் மிக வேகமாக மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுவருகிறது” என்று அவர் சொன்னது சிந்திக்கவைத்தது.
கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாகப் பொறியியல் துறையில் மாணவர்களின் சேர்க்கை குறிப்பிட்ட துறைகளில் அன்றைய சூழலுக்கு ஏற்ப முன்னும் பின்னும் செல்வது உண்டு.
ஆனால், கணினித் துறைதான் எப்போதுமே அனைவரும் விரும்பும் முதல் இடத்தில் இருந்துவந்திருக்கிறது. தற்போது இத்துறையின் மீது நாட்டம் குறைவதைக் காணும்போது கவலை மேகம் சூழ்கிறது.
ஒருகாலத்தில், இத்துறையில் மாணவர்கள் பட்டம் பெறுவதற்கு முன்பே பெரும் சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். தந்தை ஓய்வு பெறும் காலத்தில் பெற்ற ஊதியத்தை, பிள்ளை முதல் மாதமே வாங்கும் ஆச்சரியத்தைக் கண்டிருக்கிறோம்.
இந்தக் கூடுதல் வருமானம் சந்தையில் வாங்கும் திறனை அதிகரித்தது. நம் நாட்டின் பொருளாதாரச் சக்கரத்தைக் கடந்த முப்பதாண்டுகளாகச் சுழலச் செய்ததில் இத்துறையின் பங்கு கணிசமானது.
ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர்கள் கணினி / தொலைத் தொடர்புத் துறை பொறியாளர்கள் என்றால் மிகையாகாது. நிலம், வீடு போன்ற அசையாச் சொத்துக்கள், வாகனங்கள், ஆடை, அலைபேசி, பெரும் பேரங்காடிகளில் உள்ள பொருள்கள் எனப் பல்வேறு நுகர்வோர் பொருள்களின் விற்பனை அதிகரிக்க இவர்களிடமிருந்து புழக்கத்துக்கு வந்த உபரிப் பணமே காரணம்.
மற்ற பட்டதாரிகளைவிட, இவர்கள் வாழ்க்கை ஜெட் வேகத்தில் தொடங்கியது. அதனால்தான் மென்பொருள் வேலைகள் மாணவர்களும் பெற்றோர்களும் விரும்பும் ஒன்றாக இருந்தன.
மாறிவரும் சூழல்
அண்மைக் காலமாக நிறுவனங்கள் கல்லூரிகளுக்குச் சென்று இறுதி ஆண்டு மாணவர்களை வேலைக்கு எடுக்கும் (Campus Interview) சூழல் வெகுவாகக் குறைந்துள்ளது. அதுதவிர நிறுவனங்கள் ஆள்குறைப்பு செய்யத் தொடங்கிவிட்டன.