

சமூக ஊடகங்களும் திறன்பேசிப் பயன்பாடும் பரவலாகிவிட்ட இன்றைய காலத்தில் குழந்தைகள் எப்படி வளர வேண்டும், பெற்றோராக நாம் அதற்கு என்ன செய்ய வேண்டும் எனப் பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன. நமது குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளில் சமூக வலைத்தளங்களின் தாக்கம் அதிகமாக இருப்பதை மறுக்க முடியாது.
அவர்களின் எதிர்பார்ப்புகள், ஆசைகள், பயங்கள், தயக்கங்கள், முன்னுரிமைகள், லட்சியங்கள் என அனைத்திலுமே சமூக வலைத்தளங்களின் பங்கு இருக்கிறது. பெற்றோர்களைவிட, ஆசிரியர்களைவிட, சமூகத்தின் ஆளுமைகளைவிட 30 நொடி ரீல்ஸ் இன்றைய இளம் தலைமுறையினருக்குப் பெரும் உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், ஒரு குழந்தையைச் சிறப்பாக வளர்ப்பது என்பது அவர்களை அதிக மதிப்பெண்கள் பெற வைப்பதிலோ, கடுமையான கட்டுப்பாடுகளுடன் வளர்ப்பதிலோ அல்லது தொடர்ந்து கண்காணிப்பதிலோ இல்லை. மாறாக, குழந்தைகளிடம் உணர்வுரீதியாக ஒரு பாதுகாப்பான மனநிலையை (Emotional Safety) உருவாக்குவதும், இந்த டிஜிட்டல் உலகத்தைப் பயமின்றியும் விழிப்புணர்வுடன் கையாளும் திறனை அவர்களிடம் வளர்ப்பதுமே சிறந்த குழந்தைகளை உருவாக்குவதற்கான வழி.
பதற்றம் தணிப்போம்: இன்றைய குழந்தைகளின் மிகப்பெரிய பிரச்சினை தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வதுதான். ‘ஏன் எனக்கு மட்டும் நல்ல நண்பர்கள் இல்லை?’, ‘ஏன் நான் மட்டும் மகிழ்ச்சியாக இல்லை?’, ‘ஏன் எனக்கு மட்டும் அழகான முக அமைப்பு இல்லை?’ எனத் தங்களின் இயல்பான, தனித்துவமான பண்புகளை எல்லாம் மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து மனம் வருந்துகிறார்கள்.
சமூக வலைத்தளங்களின் சித்தரிக்கப்பட்ட பிம்பங்கள் இந்த ஒப்பீட்டை இன்னும் மோசமாக்குகின்றன; தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாக்குகின்றன. இந்தச் சூழலில், பெற்றோரின் பங்கு என்பது வெறும் நடத்தையை நிர்வகிப்பது அல்ல, நல்ல நடத்தையை உருவாக்கக்கூடிய ஆரோக்கியமான சூழலை உருவாக்கிக்கொடுப்பதுதான்.
குழந்தைகளுக்குப் பதற்றத்தையும் மன உளைச்சலையும் உருவாக்கக்கூடிய, பாகுபாடான சமூக வலைத்தளங்களை எதிர்கொள்ளத் தேவையான பக்குவத்தையும் நுட்பங்களையும் கற்றுக்கொடுக்க வேண்டிய இடமாக நம் வீடு இருக்க வேண்டும்.
நம் குழந்தைகள் தயக்கமில்லாமல் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய சுதந்திரத்தை வீடு அளிக்க வேண்டும். அவர்கள் பகிர்ந்துகொள்வதை வைத்து உடனடியாக அவர்களைப் பற்றி முன்தீர்மானம் கொள்ளாமல் இருக்கப் பெற்றோர்கள் முயல வேண்டும்.