

இந்தியாவிலேயே மூன்றாவது மிகப்பெரிய குறு, சிறு - நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) கட்டமைப்பைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.
சென்னையிலும் ஓசூரிலும் உள்ள வாகன உதிரிபாக உற்பத்தி, கோயம்புத்தூரின் பொறியியல் தொழில், திருச்சியின் உலோகக் கட்டமைப்பு (Fabrication) தொழில்கள் எனப் பரந்து விரிந்துள்ள பல்வேறு தொழில்சார் தொகுதிகளே (Industrial Clusters) இத்துறையின் பலம். எனினும், இந்தத் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே தொடர்வது கவலை அளிக்கிறது.
வலுவான ஆதரவின்மை
2021இல், பாரத மிகு மின் நிறுவனத்துடன் (BHEL) இணைந்த திருச்சி எம்எஸ்எம்இ தொழில் தொகுதியை மேம்படுத்துவதற்காகத் தமிழக அரசால் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவராக நான் பணியாற்றியபோது, இத்துறை எதிர்கொள்ளும் சவால்களை ஆழமாக உணர முடிந்தது.
திருச்சி ஒரு முன்னணி உலோகக் கட்டமைப்பு மையமாக (Fabrication Hub) அங்கீகாரம் பெற்றிருந்தபோதிலும், பெல் நிறுவனத்திடமிருந்து வரவிருந்த ‘ஆர்டர்கள்’ பெருமளவு குறைந்ததன் காரணமாக, அங்கு இயங்கிவந்த 400 எம்எஸ்எம்இ அலகுகளில் கிட்டத்தட்ட 50 சதவீத நிறுவனங்கள் ஐந்தே ஆண்டுகளுக்குள் ‘வாராக்கடன்’ (NPA) கணக்குகளாக மாறின.
தற்போது பெல் நிறுவனம் மீண்டு வந்துகொண்டிருந்தாலும், இந்தக் கசப்பான அனுபவம் எம்எஸ்எம்இ-க்களுக்கு முறையான, வலுவான ஆதரவு அமைப்பு எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்துகிறது. முறையான வங்கி நிதியுதவியைப் பெறுவதுதான் எம்எஸ்எம்இ-க்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியச் சவால்.
இத்துறையில் கிட்டத்தட்ட 99 சதவீதமாக உள்ள குறுந்தொழில் நிறுவனங்கள், முறையான வங்கி நிதியுதவி கிடைக்காத காரணத்தால், இன்னும் அதிக வட்டியுடைய முறைசாராக் கடன் சந்தைகளையே நம்பியிருக்கின்றன.
கடன் ஒப்புதல்களில் ஏற்படும் காலதாமதம், போதிய நடைமுறை மூலதனம் இல்லாமை போன்றவை நல்ல லாபத்தில் இயங்கக்கூடிய நிறுவனங்களைக்கூட நிதி நெருக்கடிக்குள் தள்ளிவிடுகின்றன. இச்சவால்களை எதிர்கொள்ள ஒரு விரிவான அணுகுமுறை அவசியமாகிறது.
ஐந்து மந்திரங்கள்
முதலாவதாக, குறுந்தொழில் நிறுவனங்களுக்கான நிதி அணுகலை மேம்படுத்துவது அவசியம். 2025-26ஆம் நிதி ஆண்டுக்கான எம்எஸ்எம்இ துறையின் ஒட்டுமொத்த பட்ஜெட் ஒதுக்கீடான ரூ.1,900 கோடியில், மானியங்களுக்காக மட்டுமே கிட்டத்தட்ட 95 சதவீத நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மானிய ஒதுக்கீட்டிலிருந்து ஒரு சிறிய பகுதியைத் திசைதிருப்பி, தற்போது ரூ.50 கோடியாக உள்ள ‘தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்ட’த்தின் மூலதன நிதியைக் கணிசமாக உயர்த்த முடியும். இது வங்கிகள் எம்எஸ்எம்இ-க்களுக்குத் தைரியமாகக் கடன் வழங்குவதை ஊக்குவிக்கும்.