

தமிழ்நாட்டின் பெருமிதங்களில் ஒன்று, சென்னை தரமணியில் அமைந்துள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம். 30 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டுவரும் இந்நூலகத்தில் இருக்கும் ஆவணங்களின் எண்ணிக்கை தற்போது 5 லட்சத்தை நெருங்கியுள்ளது.
சென்னை நாளை ஒட்டி ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு கண்காட்சிகள் இங்கு நடத்தப்படுகின்றன. ஆவணப்படுத்துதலின் முக்கியத்துவம், சென்னையின் பன்முகத்தன்மை உள்ளிட்டவை குறித்து இந்நூலகத்தின் இயக்குநர் க.சுந்தர் பகிர்ந்துகொண்டதிலிருந்து...
முக்கியமான ஓர் ஆவணக் காப்பகமாக, சென்னை தொடர்பான ஆவணங்களைப் பாதுகாப்பதில் ரோஜா முத்தையா நூலகத்தின் பங்கு எப்படிப்பட்டது?
பொதுவெளியில், சமூகத்தில் வெளியாகும் அனைத்து விஷயங்களையும் எந்தவிதமான முன்முடிவோடும் அணுகாமல் ஆவணப்படுத்துவதுதான் ஆவணக் காப்பாளரின் முக்கியக் கடமை. அதை ரோஜா முத்தையா நூலகம் சரியாகச் செய்துவருகிறது.
உண்மையில், சென்னை தொடர்பானவற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டுச் செயல்படவில்லை. தமிழையும் தமிழ் சார்ந்தவற்றையும் தொடர்ந்து ஆவணப்படுத்தியதன் வழியாக சென்னை தொடர்பானவையும் நிறைய ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
2007ஆம் ஆண்டில் சென்னை தொடர்பான கண்காட்சிகளை ஒருங்கிணைக்கும் நடைமுறையை இங்கு தொடங்கினோம். குறிப்பாக, எழுத்தாளரும் பத்திரிகையாளருமான எஸ்.முத்தையா சென்னை தொடர்பான கண்காட்சிகளை நடத்த ஊக்கப்படுத்தினார்.
முதலில் சென்னை நாள் கண்காட்சி என்பது ஒரு நாளாகத் தொடங்கி, பின்பு ஒரு வாரமாக விரிவடைந்தது. சென்னை நாள் கொண்டாட்டம் தொடக்கத்தில் இப்படிச் சிறிய அளவில்தான் உருவானது.
கண்காட்சியின் மூலம் வரலாற்றுத் தகவல்கள் நிறைய பேரைச் சென்றடையும். ‘அடையார் டைம்ஸ்’, ‘மயிலாப்பூர் டைம்ஸ்’ போன்ற பத்திரிகைகளுக்கு முன்னோடியாக, ‘சைட் வாக்கர்’ (Sidewalker) என்கிற பத்திரிகையில் சென்னையின் குறிப்பிட்ட ஒரு கட்டிடத்தைப் பற்றி விரிவாக எழுதி, அதற்கான ஓவியமும் வெளியிடப்பட்டிருக்கும். படிப்பதற்குச் சுவாரசியமாக இருக்கும் இதுபோன்ற விஷயங்களே வரலாற்றில் ஆவணங்களாக மாறுகின்றன.