

செஸ் விளையாட்டைப் பொறுத்தவரை, இந்தியாவின் அடையாளமாகத் திகழ்பவர்களில் முதன்மையான இடம் விஸ்வநாதன் ஆனந்த்துக்கு உண்டு.
இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர், ஐந்து முறை உலக சாம்பியன் உள்படப் பல பெருமைகளைக் கொண்டிருக்கும் இவர், செஸ்ஸில் இளையோர் பலரைச் சாதனையாளர்கள் ஆக்கும் வகையில் தனது பெயரில் ஒரு அகாடமியையும் நடத்திவருகிறார். இவர் எழுதிய ‘லைட்னிங் கிட்’ (Lightning Kid) புத்தகம் அண்மையில் வெளியானது. அவருடனான உரையாடலிலிருந்து...
செஸ் மீது காதல் பிறந்தது எப்படி?
ஆறு வயதில் அம்மாவிடம் இருந்து செஸ் கற்றுக்கொண்டேன். அப்போது என் அண்ணாவும் அக்காவும் 16 வயதைத் தாண்டியிருந்தனர். அதனால், இருவருமே அப்பா, அம்மாவைப் போல என்னைப் பார்த்துக்கொண்டார்கள்.
அக்கா கல்லூரிக்குச் சென்றபோதுதான், கல்லூரியின் அருகில் இருந்த செஸ் கிளப்பைக் கண்டுபிடித்தோம். அண்ணாவும் சில செஸ் போட்டிகளுக்கு என்னை அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் இருவரும் பணியில் சேர்ந்த பிறகு, அம்மாதான் என்னோடு போட்டிகளுக்கு வந்தார்.