

எம்.கே.நாராயணன்
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் தேதி நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து மேற்காசியப் பிராந்தியத்தில் தொடங்கிய பதற்றம் இன்றுவரை முழுமையாகத் தணியவில்லை.
பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல், ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாடு என உலகத்தின் பல்வேறு மூலைகளில் இதன் தாக்கம் எதிரொலிக்கிறது. இந்தச் சூழலில், இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனோடு மேற்கொண்ட நேர்காணல்:
மேற்காசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவு எப்படிப்பட்டது?
மேற்காசியாவில் இந்தியா எப்போதும் செல்வாக்குமிக்க முக்கிய நாடாகவே இருந்துவந்துள்ளது. கடந்த காலத்தில், இந்நாடுகளின் பல்வேறு தலைவர்களுடன் இந்தியாவின் உயர்நிலைத் தலைவர்கள் தொடர்ச்சியாகத் தொடர்பில் இருந்தது, இந்தியாவின் செல்வாக்கு வலுவடையக் காரணமாக இருந்தது.
பெரும்பாலான மேற்காசிய நாடுகள் பாரம்பரிய முடியாட்சிகளால் நிர்வகிக்கப்பட்ட காலக்கட்டத்திலும், இந்தியா போன்றதொரு ஜனநாயக நாடு என்றைக்கும் அவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கியது எனலாம்.
நம் நாட்டின் ஜனநாயக மரபுகள், மேற்காசிய முடியாட்சிகளுக்கு அச்சுறுத்தலாகத் தோன்றவில்லை என்பது இதில் கவனிக்கப்பட வேண்டும். மேற்காசியப் பிராந்திய மக்களுக்கு அது ஓர் ஊக்கமாகவும் நம்பிக்கையின் அடையாளமாகவும் எப்போதும் இருந்துவந்துள்ளது.
ஆனால், அண்மைக் காலமாகப் பொருளாதாரரீதியாக இந்தியா பெரிதும் வலுவடைந்திருந்தாலும், மேற்காசிய நாடுகளுடனான நட்புறவை மேம்படுத்துவதில் முன்பு இருந்ததைவிட மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று நினைக்கிறேன்.