

கடந்த 13 ஜூலை 2026 அன்று, ஒரு முக்கியமான வழக்கில் (Sabitri Dey @ Swasthi Dey Vs Union of India), சட்டவிரோதக் குடியேற்றம் தொடர்பாக குவாஹாட்டி உயர் நீதிமன்றம் பிறப்பித்த 27 தீர்ப்புகளை ரத்துசெய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஒருவரின் குடியுரிமையைப் பறிப்பது, அவர்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நீதிமன்றம் எச்சரித்திருக்கிறது.
மேலும், ஒருவரின் தாய்நாடு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், இந்திய அரசமைப்பின் 14ஆம் சட்டக்கூறும், 21ஆம் சட்டக்கூறும் பாதுகாப்பை வழங்குகின்றன என்பதை மீண்டும் வலியுறுத்தியது.
இந்தியாவில் குடியுரிமை குறித்த கருத்து, ‘ஜஸ் சோலி’ (Jus soli - பிறப்புரிமை) என்கிற கோட்பாட்டில் இருந்து ஜஸ் சாங்க்வினிஸ் (Jus sanguinis - ரத்த உறவின் மூலம் பெறப்படும் உரிமை) என்கிற கோட்பாட்டை நோக்கிக் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டுள்ளது.
இந்த மாற்றம், இந்திய அரசின் மாறிவரும் தன்மையைப் பிரதிபலிக்கிறது; இதில் கலாச்சாரத் தேசியவாதக் கருத்துகள், சட்டக் கட்டமைப்புக்குள் நிறுவனமயமாக்கப்பட்டு வருகின்றன.
குடியுரிமை என்பது வெறும் சட்டபூர்வ அந்தஸ்து மட்டுமல்ல; அது சட்ட / அரசியல் / பிரதிநிதித்துவ உரிமைகள், சலுகைகள் ஆகியவற்றை வழங்குவதோடு, அடையாளம் - சொந்தத்தன்மை என்கிற உணர்வையும் உருவாக்குகிறது.
இரண்டு அளவுகோல்கள்
தேச விடுதலைப் போராட்டத்தின்போது, மதச்சார்பற்ற தேசியவாதிகள், தேசிய அடையாளத்தைப் பன்முகத்தன்மை கொண்ட குடியுரிமையின் அடிப்படையில் உருவாக்கலாம் என்றும், அது சுதந்திரத்துக்குப் பிந்தைய தேசக் கட்டமைப்புக்கு உதவும் என்றும் நம்பினர்.
ஆனால் தீவிரக் கலாச்சாரத் தேசியவாதிகள், மதத்தின் அடிப்படையில் தேசிய அடையாளத்தை உருவாக்க முனைந்தனர். ‘புனித நிலம்’, ‘தந்தை நிலம்’ என்கிற இரண்டு அளவுகோல்கள் தேசிய அடையாளத்துக்கான / குடியுரிமைக்கான அடிப்படையாக முன்வைக்கப்பட்டன.