

உலகில் அமைதியை உருவாக்கவும், நாடுகளுக்கு இடையே வளங்களைப் பரிமாறிக்கொள்ளவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், பல்வேறு வகையான ஒப்பந்தங்களையும் உடன்படிக்கைகளையும் ஐக்கிய நாடுகள் அவை நிறைவேற்றி வருகிறது.
அதுபோல ஒட்டுமொத்த உலக வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களையும் முன்னெடுப்புகளையும் அவ்வப்போது மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில் வறுமையில்லாத, சுரண்டல் இல்லாத, சுகாதாரமான, ஏற்றத்தாழ்வுகள் இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என ஐ.நா. விரும்பியது.
அதன் அடிப்படையில் 2000இல் ஐ.நா. அவையின் உச்சி மாநாட்டில் (Millennium Summit) வெளியிடப்பட்ட ‘ஆயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள்’ என்கிற சாசனம் எட்டு முக்கியமான அம்சங்கள் பற்றி விவரித்தது.
குறிப்பாக, 2015ஆம் ஆண்டுக்கு முன் உலக அளவில் வறுமையைப் பாதியாகக் குறைக்க வேண்டும் என்கிற இலக்கையும் நிர்ணயித்தது. 2002ஆம் ஆண்டு தென்னாப்ரிக்காவின் ஜோகானஸ்பர்க் நகரில் நடைபெற்ற உச்சி மாநாடு நிலைத்த வளர்ச்சி குறித்தும், அதை அடைய அரசுகள் முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்தும் பேசியது.
நோக்கம் என்ன?
2012இல் ஐ.நா. அவையில் பங்கேற்ற அனைத்து நாடுகளும் இணைந்து உருவாக்கிய ‘நாம் விரும்பும் எதிர்காலம்’ என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணம் நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகளின் அடித்தளமாகும்.
இவற்றை முன்னெடுக்க ஐ.நா. உயர்மட்ட அரசியல் பேரவை, ‘நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகள்’ குறித்த சாசன உருவாக்கத்தில் ஈடுபட்டது. 193 உறுப்பு நாடுகள், சிவில் சமூக, தனியார் துறை, கல்வித் துறைப் பிரதிநிதிகள் பங்கேற்ற அரசியல், சமூகம் சார்ந்த விவாதத்தின் விளைவாக 2030க்குள் நிலைத்த வளர்ச்சியை அடைய 17 இலக்குகள் கொண்ட ஒரு பட்டியல் முன்மொழியப்பட்டது.