

இந்தியாவின் 46 பெருநகரங்களில் வசிக்கும் பெண்களில் 69% பேர் குழந்தை பராமரிப்பு, வீட்டு வேலைகள் காரணமாகப் பணியாளர் படையில் பங்கேற்க முடியாமல் போவதாக தேசியப் புள்ளியியல் அலுவலகத்தின் (என்எஸ்ஓ) புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாட்டின் வளர்ந்த பகுதிகளில்கூட இன்றளவும் பணி சார்ந்த பாலினப் பாகுபாடு நீடிப்பதை இந்த ஆய்வு அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்தியத் தொழிலாளர் சந்தைக் குறியீடுகள் குறித்து தேசியப் புள்ளியியல் அலுவலகம் அண்மையில் நடத்திய ஆய்வில், வேலைச் சந்தையில் பங்கேற்காமல் வீட்டில் இருக்கும் பெண்களில் 69% பேர் தங்களது குடும்பப் பொறுப்புகளையே முதன்மைக் காரணியாகக் குறிப்பிட்டுள்ளனர்.
ஆண்களில் 1% பேர் மட்டுமே குழந்தை பராமரிப்பு, வீட்டு வேலை காரணமாகத் தாங்கள் வேலைக்குச் செல்வதில்லை எனத் தெரிவித்துள்ளனர். பெண்களில் 16% பேர் உயர் கல்வி படிப்பதாலும், 10% பேர் உடல்நலம், வயது வரம்பு காரணமாகவும் பணிக்குச் செல்லவில்லை எனக் கூறியுள்ளனர்.
ஆண்களிலோ, 53% பேர் உயர் கல்வியையும், 39% பேர் உடல்நலம் - வயது முதிர்ச்சியையும் காரணம் காட்டியுள்ளனர். மேற்கு வங்கத்தின் ஹெளரா நகரில் 83%, குஜராத்தின் சூரத் நகரில் 81%, மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் 78% பெண்கள் வீட்டு வேலைகளால் வெளியே பணிக்குச் செல்வதில்லை.