

தமிழுலகம் நன்கு அறிந்த பேராளுமைகளுள் முதன்மையானவர் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி. கோவை வெள்ளலூரில் 1942இல் பிறந்த இ.சு., வாழ்நாளின் இறுதிவரை தமிழ்ப் பணியையே மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர். ஒன்றாம் வகுப்பில் தொடக்கப் பள்ளி ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கியவர் என்பதைப் பெருமிதத்துடன் நினைவுகூர்வார். ‘பரிமேலழகர் திருக்குறள் உரைத்திறன்’ என்னும் முனைவர் பட்ட ஆய்வு, இவருடைய சிந்தனைப் புலத்தைக் கட்டமைத்தது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் பாதை சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருக்குறள் இருக்கையிலிருந்து கல்விப் பணியைத் தொடங்கினார். அறிஞர்கள் மு.வரதராசனார், க.த.திருநாவுக்கரசு ஆகியோரின் அரவணைப்பும், பேராசிரியர் மு.சண்முகம்பிள்ளையுடனான பணியும் இவருக்குள் சுவடியியல், பதிப்பியல் சார்ந்த பேரார்வத்தைத் தூண்டின. பின்னர் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறை, தமிழ் இலக்கியத்துறை ஆகியவற்றில் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் உயர்ந்து முத்திரை பதித்தார். பல்கலைக்கழகப் பதிப்புத்துறையின் இயக்குநராகவும் திறம்படச் செயல்பட்டார்.