

தமிழகம் இன்று இந்தியாவின் மிக முக்கியமான தொழில் / உற்பத்தி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. வாகன உற்பத்தி, பொறியியல், ஜவுளி உற்பத்தி, தோல், மின்சாதனங்கள், உணவு பதப்படுத்துதல், மின்னணு உற்பத்தி, சிறு-குறு தொழில்கள் உள்ளிட்ட பல துறைகளில் வேகமான வளர்ச்சி நிகழ்ந்துவருகிறது.
மகாராஷ்டிரம், குஜராத் போன்ற மாநிலங்களுடன் போட்டியிடும் அளவுக்குத் தமிழகம் முதலீடுகளை ஈர்த்துவருகிறது. ஆனால், இந்த வளர்ச்சியின் பின்னால் மிகப்பெரிய மனிதவள நெருக்கடி உருவாகிக்கொண்டிருப்பதைப் பலரும் கவனிக்கத் தவறுகிறார்கள்.
நிரப்பப்படாத இடைவெளி
இன்று தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள், நிறுவனங்கள் புதிய / அனுபவம் உள்ள பணியாளர்களைத் தேடிக் கடுமையாகப் போராடுகின்றன. அதே வேளை, வேலைவாய்ப்பு இல்லாமல் ஏராளமான இளைஞர்கள் உள்ளனர்.
இது வேலைவாய்ப்பு பற்றாக்குறை அல்ல. திறனற்ற கல்வி அமைப்பு, தொழில் துறைக்குப் பொருந்தாத பயிற்சி, வேலை பற்றிய தவறான புரிதல், இளைஞர்களின் மனநிலை மாற்றமே இதற்கெல்லாம் முக்கியக் காரணங்கள்.
பல பட்டதாரிகள், பட்டயம் (டிப்ளமா) முடித்த இளைஞர்கள் தொழில் துறைக்குத் தேவையான நடைமுறைத் திறன்களைப் பெறவில்லை. கல்லூரிகளில் கற்றுக்கொடுக்கப்படும் கல்விக்கும் தொழில் துறையில் தேவைப்படும் திறன்களுக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி உள்ளது.
இதனால் வேலைவாய்ப்புகள் இருந்தும் சரியான மனிதவளம் கிடைக்கவில்லை. மறுபுறம், வேலை தேடும் இளைஞர்கள் தங்களது படிப்புடன் தொடர்பில்லாத தற்காலிக வேலைகளில் ஈடுபடுகின்றனர். இந்தத் தற்காலிக வேலை முறை எதிர்காலத்தில் அவர்களின் வளர்ச்சியைப் பாதிக்கிறது.
இன்றைய இளைஞர்களில் ஒரு பகுதியினர் செளகரியமான பணி வாழ்க்கையையே விரும்புகின்றனர். தாங்கள் பிறந்த ஊர், படித்த பகுதி அல்லது அருகில் உள்ள இடங்களில் மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்துவருகிறது.
சிப்காட், சிட்கோ தொழிற்பேட்டைகள் அல்லது பிற மாவட்டங்களில் கிடைக்கிற வேலைவாய்ப்புகளுக்குச் செல்வதற்குப் பலரும் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் தொழிற்சாலைகள் மனிதவளப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.