

மனிதர்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் கருவிகளும் தொழில்நுட்பங்களும் முக்கியப் பங்காற்றுகின்றன. இவற்றின் மாற்றம் மனிதர்களின் உழைப்பையும் சமூக உறவுகளையும் மாற்றுகின்றன.
நவீனக் கருவிகளால் உருவான முதலாளித்துவம், மனிதர்களின் வேலையையும் நேரத்தையும் தீர்மானித்தது. அஞ்சல்களும் தந்திகளும் அரசுக்கும் மக்களுக்கும் சமூக உறவுகளுக்கும் இடையேயான உணர்வுபூர்வத் தொடர்பு சாதனங்களாக இருந்தன.
அஞ்சல்கள் பொறுமையையும், தந்திகள் அவசர உணர்ச்சிகளையும் உருவாக்கின. அவை பெரும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித்தந்தன. கடிதங்களும் தந்திகளும் வரலாற்று ஆவணங்கள் ஆகின. இவற்றின் அடுத்தகட்ட மாற்றமாக எண்ணிலக்கக் (டிஜிட்டல்) கருவிகளும், குறுஞ்செய்தி, மின்னஞ்சல், வாட்ஸ்அப் போன்றவையும் உருவாகியுள்ளன.
அரசின் அடையாள அட்டை, நலத் திட்டங்கள் போன்றவற்றைப் பெறுவதற்கும், கற்றல், வேலை தேவைக்காகவும் திறன்பேசியையும் செயலிகளையும் மூலதனமாக வைத்திருப்பது கட்டாயமாகிவிட்டது. இவற்றை கரோனா பெருந்தொற்று பரவலாக்கியது. இவற்றில் குறுஞ்செய்தியையும் மின்னஞ்சலையும்விட வாட்ஸ்அப் பேராதிக்கம் செலுத்துகிறது.
அலுவலும் அலுப்பும்
அரசு, தனியார் நிறுவனங்களின் அலுவல்களில் வாட்ஸ்அப் ஒரு தொடர்பு சாதனமாகவும், அதுவே ஒரு அலுவலகம் போலவும் மாற்றப்பட்டுவிட்டது. அலுவலகத்தின் சாதாரண, அவசரத் தகவல்கள், வேலைகள் அதில் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.
ஒவ்வோர் அலுவலகத்திலும் நிர்வாகத்தின் படிநிலைக்கு ஏற்ப ஒன்றுக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அவை அதிகாரிகளின் நிர்வகிப்பின்கீழ் செயல்படுகின்றன.
இக்குழுவில் நிர்வாகிகள் மட்டும் அலுவல்களை அறிவிப்பதால் அவை ஏற்புடையதே. அதிகாரிகள் பகிர்ந்துகொள்ளும் ஆணைகளுக்கு உடனுக்குடன் ‘குறித்தேன்’ எனப் பணியாளர்கள் பணிந்து பதிலளிக்கின்றனர். அலுவலக நேரத்தில் மட்டுமன்றி அலுவலற்ற நேரங்களிலும் சாதாரணக் கோப்புகளும் தரவுகளும் அவசரமாகக் கேட்கப்படுகின்றன.
இப்போக்குகளால் திறன்பேசி எப்போதும் கையில் இருக்கின்ற கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. இதன் பொருள், அலுவலகம் எப்போதும் கையில் இருக்கிறது என்பதாகும்.
விடுமுறையில் இருக்கிற பணியாளர்கள் திறன்பேசியுடன் இருக்கிறார் என்றால், அவர் மறைமுகமாக அலுவலகத்தில் இருக்கிறார் என்றே பொருள். அரசு, தனியார் நிறுவனங்களின் பணியாளர்களுக்கு உரிய அலுவல் பொறுப்புகள் இருக்கின்றன. ஆனால், சாதாரண அலுவலையும் அலுவலற்ற நேரத்தில் வேலையாக மாற்றுவதால் அவர்கள் அலுப்படைகின்றனர்.