

பிப்ரவரி முதல் நாள் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கலானது. எப்போதும் போல் ஊடகங்கள் அதை விரிவாக வெளியிடவும் விவாதிக்கவும் செய்தன. ஆனால் அதே நாளில் வெளியான 16ஆவது நிதி ஆணையத்தின் அறிக்கைக்குப் போதிய கவனம் கிடைக்கவில்லை. நிதிநிலை அறிக்கை நடப்பு நிதியாண்டுக்கு மட்டுமானது.
இந்த நிதி ஆணையத்தின் அறிக்கையோ அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கானது (2026-31). அதுதான் மத்திய அரசு மக்களிடமிருந்து வசூலிக்கிற வரி வருவாயை மாநிலங்களுக்கு எவ்விதம் பங்கிட வேண்டும் என்று வரையறுக்கிறது. 15ஆவது நிதி ஆணையத்தின் பங்கீடு தென் மாநிலங்களுக்குப் பாதகமாக அமைந்தது என்கிற குற்றச்சாட்டு பலமாக இருந்தது.
இப்போது 16ஆவது ஆணையத்தின் பங்கீடு தென் மாநிலங்களுக்கு நீதி வழங்கியிருக்கிறதா? நமது அரசமைப்புச் சட்டத்தின் 280ஆவது கூறின்படி ஐந்தாண்டுக்கு ஒரு முறை நிதி ஆணையம் (Finance Commission) நிறுவப்படும். இந்த வரிசையில் 16ஆவது நிதி ஆணையத்தின் அறிக்கைதான் இப்போது வெளியாகியுள்ளது.
மத்திய அரசு பெறும் வரி வருவாயை நிதி ஆணையம் இரண்டு கட்டங்களில் பங்கு வைக்கும். முதற்கட்டமாக, இந்த நிதியில் எத்தனை சதவீதம் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் (Vertical Devolution), இரண்டாம் கட்டமாக அவ்விதம் ஒதுக்கப்பட்ட நிதியில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எத்தனை சதவீதம் அளிக்கப்பட வேண்டும் என்றும் (Horizontal Devolution), ஆணையம் பரிந்துரைக்கும்.
செங்குத்துப் பகிர்வு: 15ஆவது நிதி ஆணையம் மொத்த வருவாயில் 41%ஐ மாநிலங்களுக்கு ஒதுக்கியது. தமிழகம் உட்படப் பல மாநிலங்கள் இதை 50%ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தன.
ஆணையம் ஒப்பவில்லை. மாநிலங்களுக்கான பங்கீடு இனியும் 41%ஆகவே தொடரும். மேலும், ஆணையம் ஒதுக்கிய 41% நிதி மாநிலங்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. காரணம் மத்திய அரசு விதித்துவரும் ‘மேல் வரி’ (cess), ‘கூடுதல் கட்டணம்’ (surcharge) எனப்படும் ‘சிறப்பு வரிகள்’.