

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இன்று ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளது. இந்த வளர்ச்சி எந்த அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும் என்கிற கேள்வி மிக முக்கியமானது. இதுவரை வளர்ச்சி என்பது பெரும்பாலும் உற்பத்தி அளவுகள், வருமானம், முதலீட்டு மதிப்பு, வேலைவாய்ப்பு எண்ணிக்கை ஆகியவற்றின் மூலம் மட்டுமே கணக்கிடப்பட்டது. ஆனால், இன்றைய சூழலில், வளர்ச்சி என்பது அதன் தாக்கங்களோடும் சேர்த்தே மதிப்பிடப்பட வேண்டும் என்கிற புரிதல் வலுப்பெற்றுவருகிறது.
இந்தச் சூழலில்தான் இஎஸ்ஜி (ESG) - சுற்றுச்சூழல் (Environmental), சமூகம் (Social), நிர்வாகம் (Governance) - என்கிற கருத்து இந்திய நிறுவனங்களின் செயல்பாடுகளில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இஎஸ்ஜி என்பது ஒரு புதிய சட்ட வார்த்தை அல்ல; அது வளர்ச்சியின் தரத்தை அளவிடும் ஒரு விரிவான கட்டமைப்பு.
இருப்பினும், இந்தியாவில் இந்த நடைமுறை பெரும்பாலும் விதிமுறைகள், அறிக்கைகள், வெளியிட வேண்டிய கட்டாயம் ஆகியவற்றுடன் மட்டுமே இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த அணுகுமுறை தொடருமானால், இஎஸ்ஜி தனது அடிப்படை நோக்கத்தை இழந்து, ஒரு நிர்வாகச் சுமையாக மட்டுமே மாறும் அபாயம் உள்ளது.
இந்தியாவில் நிலவரம்: கடந்த சில ஆண்டுகளில் இஎஸ்ஜி குறித்த விவாதம் இந்தியாவில் வேகமாக வளர்ந்துள்ளது. பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்புகள், வங்கி - நிதி நிறுவனங்கள், சர்வதேச முதலீட்டாளர்கள் ஆகியோர் இஎஸ்ஜியைப் பின்பற்றுவதை முக்கிய அளவுகோலாக மாற்றியுள்ளனர். குறிப்பாக, பெரிய பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு இஎஸ்ஜி தொடர்பான அறிக்கைகள் இன்று கட்டாயமாகிஉள்ளன.
இதன் விளைவாக, இஎஸ்ஜி என்பது இனி விருப்பமான ஒன்றல்ல; அது நிறுவனங்களின் தினசரி நிர்வாகத்தின் ஒரு பகுதியாக மாறிவருகிறது. ஆனால், நடைமுறை நிலைமை இதைவிட ஆழமான சிக்கல்களைக் கொண்டுள்ளது.
பல நிறுவனங்களில் இஎஸ்ஜி என்பது அறிக்கைகள் தயாரித்தல், தரவுகள் சேகரித்தல், வெளியிடுதல், விதிமுறைகளைப் பின்பற்றுதல் என்கிற அளவிலேயே நிற்கிறது. உற்பத்தி முறை, வளப் பயன்பாடு, தொழிலாளர் பாதுகாப்பு, நிர்வாக முடிவெடுத்தல் ஆகிய அடிப்படைச் செயல்பாடுகளில் இஎஸ்ஜி முழுமையாக ஊடுருவவில்லை.