

உலகளவில் மாபெரும் வெற்றியடைந்த பல அற்புதமான திரைப்படங்கள், உலக இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டவைதான். சிறந்த நாவல்களும் நாடகங்களும் சினிமா வடிவம்பெறும்போது, அதன் கதைக்களத்தை உருவாக்க காரணமாக இருந்த எழுத்தாளர்களுக்கு உரிய அங்கீகாரமும் காப்புரிமைப் பயன்களும் வழங்கப்படுவதே உலகளாவிய வழக்கமாக உள்ளது.
நமது திரையுலகிலும் ஒரு காலத்தில் இந்த நற்பழக்கம் இருந்தது; ஆனால், காலப்போக்கில் அது கைவிடப்பட்டுவிட்டது. ஒருசில நல்ல இயக்குநர்கள் மட்டுமே இன்றைக்கும் இதற்கு விதிவிலக்காகச் செயல்படுவது பாராட்டுக்குரியது.
கசப்பான அனுபவம்: சில ஆண்டுகளுக்கு முன்பு, ஓர் இலக்கியக் கூட்டத்தில் நாவல் ஒன்றைப் பற்றிப் பேசிவிட்டுத் திரும்பியபோது நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. நிகழ்வு முடிந்து நான் பேருந்து நிலையத்துக்கு நடந்து சென்றபோது, கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் என்னைப் பின்தொடர்ந்து வந்தார். அவர் என்னிடம், “நாவலை மிகவும் சிறப்பாக விளக்கினீர்கள். அப்படிப்பட்ட ஒரு கதையைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். அந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும்? சினிமாவுக்கு இன்னும் பல நாவல்கள் தேவைப்படுகின்றன” என்றார்.
இதைக் கேட்டதும் எனக்குள் பெரும் மகிழ்ச்சி. சினிமா உலகினர் நாவல்களைத் தேடி வரத் தொடங்கியிருக்கிறார்கள்; இதனால் சினிமாவும் தரமடையும், எழுத்தாளர்களுக்கும் உரிய பொருளாதார பலன் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.