

‘இளமை முதல் இறுதிவரை காமராஜர் ஆடம்பர வாழ்க்கையை விரும்பியதே இல்லை. எதிலும் எளிமையாய் இருப்பார். ஆனால், ஒருபோதும் கஞ்சத்தனம் அவரிடம் இருந்ததில்லை.
அவர் முதல்வராக இருந்தபோது வாங்கிய சம்பளத்தின் பெரும் பகுதியை உதவி நாடிவரும் ஏழைகளுக்கே கொடுத்தார். சிக்கனமாக இருந்து, பிறருக்கு உதவுவது அவருடைய இயல்பான குணம்’ என்கிறார் இளமைப் பருவம் முதல் அவருடன் இணைந்து பணியாற்றிய முருக.தனுஷ்கோடி.
பொதுவாக, எந்தப் பண்டிகையையும் காமராஜர் கொண்டாடியதே இல்லை. தீபாவளியின் போதும்கூடப் புது வேட்டி, புது சட்டை அணிய மாட்டார். பெரும்பாலும் கோயிலுக்குப் போனது கிடையாது.
அதற்காக அவரை நாத்திகர் என்றும் கூற முடியாது. பொதுவாக, சம்பிரதாயச் சடங்குகளில் நம்பிக்கை இல்லாதவர். ஆனால், அவருடன் குடும்பத்தோடு இருக்கும் உதவியாளர் வைரவனைத் தீபாவளிக்குப் புதிய துணிமணிகள் வாங்கிக்கொள்ளச் சொல்லுவார்.
காமராஜரின் அன்றாடம்
காலையில் முகச்சவரம் செய்துகொண்டு குளிப்பார். இரவுச் சாப்பாட்டுக்கு முன் எவ்வளவு நேரமானாலும் குளித்துவிட்டுத்தான் சாப்பிடுவார். இரவு வேளையில் தம்மைப் பார்க்க வந்தவர்களிடம் பேசிவிட்டுப் புத்தகங்களை, பத்திரிகைகளைப் படிப்பது வழக்கம்.
சில நாள்களில் இரவு 2 மணி வரைகூடப் படித்துக்கொண்டிருப்பார். சிக்கலான அரசியல் பிரச்சினைகளைப் பற்றி முக்கியஸ்தர்களுடன் விவாதிக்கும்போது, காலை ஐந்து மணி வரைகூடப் பேசிக்கொண்டிருப்பார்.
பிறகு, ஒரு மணி நேரம் தூங்கிவிட்டு எழுந்து, வழக்கம்போலத் தம் அலுவல்களைப் பார்ப்பார். பகல் சாப்பாட்டை முடித்தவுடன் குட்டித்தூக்கம் போடும் பழக்கம் அவரிடம் இருந்தது. காமராஜர் வீட்டுக்குத் தினசரி 75 கடிதங்களுக்கு மேல் வரும்.