

வரலாறு நெடுகக் கடவுள், ஆன்மா, உள்ளுணர்வு, நனவிலி மனம் (Unconscious Mind) ஆகிய அனைத்துடனும் பிரிக்க முடியாமல் தொடர்ந்து பயணிப்பது இசை.
தனித்த மனிதரின் இருத்தல், கேள்விக்கு உள்ளாகும்போதும் மனிதர்களுக்கு இடையிலான உறவுச் சிக்கல்களின்போதும் நிறம், இனம், சாதி ஆகியவற்றால் மனித மாண்பு சிதைக்கப்படும்போதும் அங்கே அரவணைக்கவும் ஆர்ப்பரிக்கவும் இசை அவசியமாகிறது.
இசையே ஆயுதமாக..
மேற்கு நாடுகளில் இசை என்பது ஒரு போராட்ட வடிவம். அமெரிக்காவில் - குறிப்பாக, நிறவெறி உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் - அவர்களின் போராட்டமே இசையால் ஆனதாக இருந்தது.
ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் போராட்டங்களில் பீட் சீகர், ஜோன் பயஸ், நினா சிமோன், பாப் மார்லி போன்ற கலைஞர்களின் பாடல்களைக் கூட்டத்தினர் பாடுவார்கள். அந்தக் கலைஞர்களும் போராட்டத்தின் அங்கமாக இருப்பார்கள்.
வெள்ளை நிறவெறி எதிர்ப்பின் அடையாளமாக பியானோவில் இருக்கும் வெள்ளைக் கட்டைகளைத் (Keys) தவிர்த்துவிட்டு, கருப்புக் கட்டைகளை மட்டுமே வாசித்து (Pentatonic) பல எதிர்ப்புப் பாடல்கள் உருவாக்கப்பட்டன.
‘டென்ட்ஸு வெப்சட்னி’ (Dentsu Webchutney) என்கிற நிறுவனம், கருப்புக் கட்டைகள் அனைத்தையும் எடுத்துவிட்டு, வெள்ளைக் கட்டைகளை மட்டுமே வைத்து ஒரு பியானோவை உருவாக்கியது.
கருப்புக் கட்டை இல்லாததால் அதில் வாசிக்கப்பட்ட இசையானது கேட்பதற்கு மிகக் கொடூரமாக இருந்தது. கறுப்பு - வெள்ளை இரண்டும் இணைந்தால்தான் ‘ஒத்திசை’ (Harmony) பிறக்கும் என்று இனங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்காகப் பரப்புரை செய்யப்பட்டது.