

மனிதர்களை ஏந்திய எந்த விண்கலமும் இதுவரை சென்றிராத தொலைவுக்குச் சென்று, புதிய சாதனையைப் படைத்திருக்கிறது நாசாவின் ‘ஆர்டிமிஸ்-2’ திட்டத்தில் அனுப்பப்பட்ட ஒரியான் (Orion) விண்கலம். இந்திய நேரப்படி ஏப்ரல் 7 அதிகாலை 4:37 மணிக்கு இந்த விண்கலம் ஒரு விண்வெளி மைல்கல்லை எட்டியிருக்கிறது.
ஏப்ரல் 15, 1970இல் நிலவைச் சுற்றிவந்த ‘அப்பல்லோ 13’, பூமியிலிருந்து சுமார் 4,00,171 கி.மீ. தொலைவு சென்று திரும்பியது. அந்த விண்கலத்தில் பயணம் செய்த ஜிம் லோவல், ஜாக் ஸ்வைகேர்ட், ஃபிரெட் ஹெய்ஸ் ஆகியோர் அந்த சாதனையைப் படைத்தனர்.
ஆனால் 2026 ஏப்ரல் 7 அதிகாலை 4:37 மணிக்கு, ஒரியான் விண்கலம் பூமியிலிருந்து 4,06,771 கி.மீ. தொலைவு சென்றது. அதாவது, ‘அப்பல்லோ 13’ விண்கலத்தைவிட 6,601 கி.மீ. அதிகத் தொலைவு சென்று, புதிய சாதனையைப் படைத்தது.
இந்திய நேரப்படி, ஏப்ரல் 6 இரவு முதல் ஏப்ரல் 7 அதிகாலை வரையிலான நேரம் இந்தப் பயணத்தின் உச்சக்கட்டத் தருணம். அப்போதுதான் நிலவைச் சுற்றிவளைத்து பூமிக்குத் திரும்பும் நிகழ்வு நடைபெற்றது.
சரியாக அதிகாலை 4:17 மணிக்கு, நிலவின் பின்புறம் சென்ற ‘ஒரியான்’ விண்கலம், பூமியுடனான தொடர்பை இழந்தது. ஏப்ரல் 7 அதிகாலை 4:32 மணிக்கு, நிலவுக்கு மிக அருகில் (6,544 கி.மீ. தொலைவில்) அது கடந்து சென்றது. 4:57 மணிக்கு, நிலவின் பின்புறத்திலிருந்து வெளிப்பட்டு, பூமியுடன் மீண்டும் தொடர்புகொண்டது.